/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடிநீர் வழங்க கோரி டவுன் பஞ்., முற்றுகை
/
குடிநீர் வழங்க கோரி டவுன் பஞ்., முற்றுகை
ADDED : ஜூலை 14, 2011 01:36 AM
சென்னிமலை: சென்னிமலை ஒன்பதாவது வார்டு மணிமலை பகுதி மக்கள் குடிநீர் வழங்க கோரி, டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சென்னிமலை டவுன் பஞ்சாயத்து பகுதி ஒன்பதாவது வார்டு மணிமலை பகுதியில், புதிதாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. இப்பகுதி மேடான பகுதியாக இருப்பதால், தண்ணீர் சரியாக செல்கிறதா என, சோதனை நடந்து வருகிறது. ஆனால், இப்பகுதி மக்கள் டவுன் பஞ்சாயத்துக்கு தெரிவிக்காமல், ஆளாளுக்கு தங்கள் வீடுகளுக்கு அருகே, பொது குழாய் எனக் கூறி 15 குழாய்களை அமைத்துக் கொண்டனர். செய்வதறியாமல் திகைத்த டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், இப்பகுதிக்கு தண்ணீர் விநியோகத்தை நிறுத்தியது. தங்கள் பகுதிக்கு தண்ணீர் வழங்க கோரி, மணிமலை பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சென்னிமலை டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முன் திரண்டனர். சாலையில் அமர்ந்து மறியலுக்கு முயன்றனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய டவுன் பஞ்சாயத்து தலைவர் கோபாலகிருஷ்ணன், ''டவுன் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகுதான், வரைமுறைக்கு உட்பட்டு பொது குழாய் அமைக்கப்படும். அனுமதியில்லாமல் அமைத்த குழாய்களை அகற்ற வேண்டும்,'' என்றார். ஆனால், பொதுமக்கள், 'தற்போது அமைத்த குழாய்களுக்கே தண்ணீர் வேண்டும்' என, கூறி போராட்டம் நடத்தினர். ''இது முறையற்ற செயல்; உங்களைப் போல் மற்ற பகுதி மக்கள் செய்தால்; உங்கள் பகுதி மேட்டுப்பகுதி; தண்ணீர் வரவே வராது,'' என, தலைவர் கூறினார். டவுன் பஞ்சாயத்துகள் உதவி இயக்குனர் ஃபோன் மூலம், 'விதிமுறைப்படி குழாய் அமைக்கப்படும்' என, கூறிய பின், மக்கள் கலைந்து சென்றனர்.

