ADDED : ஜன 22, 2025 01:19 AM
சாலை மறியலில் ஈடுபட்ட 410 மாற்றுத்திறனாளி கைது
ஆத்துார், :அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை நேற்று, மாவட்ட பொருளாளர் கனகராஜ் தலைமையில் பலர், முற்றுகையிட்டனர். தாசில்தார் பாலாஜி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பேச்சு நடத்தினர். பின், ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, தேசிய ஊரக வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு, 4 மணி நேர பணி வழங்குதல்; 8 மணி நேர வேலை உத்தரவை திரும்ப பெறுதல்; ரேஷன் கார்டுகளுக்கு, 35 கிலோ அரிசி வழங்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் பேச்சு நடத்தியும் மறியலை கைவிடாததால், 77 பெண்கள் உள்பட, 189 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், 4 மணி நேர வேலை, முழு ஊதியம் வழங்குவதை உறுதிப்படுத்தல்; மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கார்டுகளுக்கு, 35 கிலோ இலவச அரிசி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மேட்டூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், வட்ட தலைவர் அம்மாசி, செயலர் ஜான் பெர்ணான்டஸ் உள்பட, 155 பேரை, மேட்டூர் போலீசார் கைது செய்தனர்.
இடைப்பாடி தாலுகா அலுவலகம் முன், தர்ணாவில் ஈடுபட்ட, சேலம் மாவட்ட இணை செயலர் உமாகாந்த் தலைமையில், 66 பேரை, இடைப்பாடி போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
ஓமலுார் தாசில்தார் அலுவலகம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில இணை செயலர் அமலாராணி தலைமை வகித்தார்.
அதில் ஆந்திரா போன்று தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தி வழங்குதல்; இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல் என்பன உள்பட, 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, ஓமலுார்- தாரமங்கலம் ரயில்வே மேம்பாலம் முன், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரை மணி நேரம் தொடர்ந்த நிலையில், இரு புறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. இதனால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். பின், மறியலில் ஈடுபட்டோரை, ஓமலுார் போலீசார் கைது செய்ததால்,
போக்குவரத்து சீரானது.
