/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அ.தி.மு.க., பிரமுகர் கொலையில் தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு
/
அ.தி.மு.க., பிரமுகர் கொலையில் தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு
அ.தி.மு.க., பிரமுகர் கொலையில் தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு
அ.தி.மு.க., பிரமுகர் கொலையில் தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு
ADDED : ஜூலை 06, 2024 02:36 AM
சேலம்:அ.தி.மு.க., பிரமுகர் கொலையில், சேலம் மாநகராட்சியின், தி.மு.க., கவுன்சிலர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம், தாதகாப்பட்டி, காமராஜர் நகரை சேர்ந்தவர் சண்முகம், 62. அ.தி.மு.க.,வில், கொண்டலாம்பட்டி பகுதி செயலரான இவர், இருமுறை மண்டல குழு தலைவர் பதவி வகித்துள்ளார். ஒரு நம்பர் லாட்டரி, கஞ்சா விற்பனைக்கு எதிராக இவர் செயல்பட்டதால், இவரை, கடந்த, 3ல் மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது.
இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட, தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் மாநகராட்சியின், 55வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமாரை கைது செய்தால்தான், அவரது உடலை வாங்குவோம் என, சண்முகத்தின் குடும்பத்தினர், உறவினர்கள், அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, விசாரணையில் வைத்திருந்த சதீஷ்குமார் உள்பட, 10 பேரை, அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். இதனால் சண்முகம் உடலை, அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
சண்முகம், சதீஷ்குமார் இடையே லாட்டரி உள்பட பல்வேறு விவகாரங்களில் முன்விரோதம் இருந்துள்ளது. 55வது வார்டில் மேற்கொள்ளப்படும் சாலை, கால்வாய் உள்ளிட்ட திட்டப்பணிகள் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் அவர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். அப்பகுதியில் உள்ளவர்கள், முக்கிய அ.தி.மு.க., பிரமுகர்கள், அவர்களை சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து சதீஷ்குமார், சண்முகத்துக்கு மிரட்டல் விடுத்துள்ளார். அத்துடன் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற மனப்போக்கும் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து சண்முகம்இடையூறு செய்து வந்ததால் சதீஷ்குமார் திட்டமிட்டு கொலை செய்துள்ளார். கொலை செய்தவர்களுக்கும், சதீஷ்குமாருக்கும் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது, எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்பன உள்ளிட்டவை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை வழக்கில், 55 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் தனலட்சுமி உள்பட, 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனலட்சுமி தற்போது தலைமறைவாக உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சண்முகம் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு, நேற்று சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸ் 'கோட்டை'
அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:
சண்முகம் கொலை வழக்கில் போலீசின் செயல்பாடு சந்தேகம் ஏற்படுத்தும்படி உள்ளது. மூன்று நாட்களாக அந்த கும்பல் நோட்டமிட்டு, சண்முகத்தை கொலை செய்துள்ளது. இதை கூட, மாநகர நுண்ணறிவு பிரிவு போலீசார் கண்டுபிடிக்கவில்லை.
இது போலீசாரின் செயல்பாட்டில் உள்ள குறைபாட்டையே காட்டுகிறது. மேலும் சதீஷ்குமார் ரவுடி பட்டியலில் இருப்பதும், அவர் சண்முகத்தை மிரட்டிச்சென்றதும் போலீசாருக்கும் தெரியும். சரியான முறையில் கண்காணித்திருந்தால், கொலையை கூட தடுத்திருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.