/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின் அலுவலகம் இடமாற்றம்: மக்கள் சாலை மறியல்
/
மின் அலுவலகம் இடமாற்றம்: மக்கள் சாலை மறியல்
ADDED : மே 12, 2024 11:54 AM
பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே தும்பலில், ஊராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டது. அந்த அலுவலகத்தில், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மின் இணைப்பு, மின் வினியோகம், கட்டணம் செலுத்தல் உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் நாளை முதல், தும்பல் துணை மின்நிலைய வளாகத்தில் உள்ள புது கட்டடத்தில், அந்த அலுவலகம் செயல்படும் என, வாழப்பாடி மின்கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால், 3 கி.மீ.,ல் உள்ள துணை மின்நிலைய பகுதிக்கு இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்த மக்கள், நேற்று, தும்பல் பஸ் ஸ்டாண்ட் எதிரே, சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏத்தாப்பூர் போலீசார் பேச்சு நடத்தினர்.
அப்போது மக்கள், 'போக்குவரத்து வசதி இல்லாத துணை மின் நிலைய பகுதியில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டால் சிரமத்துக்கு ஆளாக நேரிடும். ஊர் மையப்பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்தனர். மின்வாரிய அலுவலர்களிடம் பேசி தீர்வு காணப்படும் என, போலீசார் உறுதியளித்ததால், அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், 'அலுவலக கட்டடம் சேதமானதால் இடமாற்ற முடிவு செய்தோம். ஊராட்சி நிர்வாகம், மாற்று இடத்தை ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளதால், ஊர் மையப்பகுதியில் மின்வாரிய அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.