சேலம்: ஈஸ்டர் பண்டிகையையொட்டி, சேலம், 4 ரோடு குழந்தை இயேசு பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வன் ராயப்பன் தலைமையில் சிறப்பு வழிபாடு, நேற்று முன்தினம் இரவு நடந்தது. 12:00 மணிக்கு இயேசு சொரூபம் திறக்கப்பட்டது. பின் அல்லேலுயா பாடல்கள் பாடப்பட்டன. நேற்று காலை பங்குத்தந்தை ஜோசப் லாசர் தலைமையில் ஈஸ்டர் திருப்பலி நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். பலர், மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர்.
அதேபோல் கலெக்டர் அலுவலகம் அருகே சி.எஸ்.ஐ., ஆலயத்தில் ஆயர் ஜவகர் வில்சன் ஆசிர் டேவிட் தலைமையில் காலையில் பரிசுத்த நற்கருணை, ஆங்கில ஆராதனை, தமிழ் ஆராதனை நடந்தது. அழகாபுரம் புனித மிக்கேல் அதிதுாதர் ஆலயம், கோட்டை லெக்லர் நினைவாலயம், ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், அஸ்தம்பட்டி இமானுவேல் ஆலயம் உள்ளிட்ட மாநகர தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள், குடும்பத்தினருடன் புத்தாடை அணிந்து பங்கேற்றனர். ஒருவருக்கொருவர், வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

