/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கறி வெட்டும் இடமாக மாறிய எம்.எல்.ஏ., ஆபீஸ்
/
கறி வெட்டும் இடமாக மாறிய எம்.எல்.ஏ., ஆபீஸ்
ADDED : ஆக 14, 2024 09:26 PM

ஓமலுார் : சேலம் மாவட்டம் ஓமலுார் தொகுதி எம்.எல்.ஏ.,வாக, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மணி உள்ளார். அவர் அலுவலகத்தை, கோட்டகவுண்டம்பட்டியில் அமைத்துக் கொண்டார். இதனால் அரசு சார்பில், ஓமலுார் கடை வீதியில் கட்டப்பட்ட, எம்.எல்.ஏ., அலுவலகம் பயன்பாடின்றி பூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதன் அருகே உள்ள கடகாடப்பன் காளியம்மன் கோவில் விழா நிறைவாக, நேற்று காலை கிடா வெட்டி பலியிடப்பட்டது. தொடர்ந்து, எம்.எல்.ஏ., அலுவலக கார் ஷெட்டில் வைத்து ஆட்டுக்கறியை வெட்டி பங்கு போட்டு, விழாக்குழுவினர், மக்களுக்கு வழங்கினர். இதனால், எம்.எல்.ஏ., அலுவலகம், ஆடு அடிக்கும் தொட்டியாக மாறி விட்டதாக, மக்கள் குற்றம்சாட்டினர்.
இதுபற்றி ஓமலுாரைச் சேர்ந்த பி.வேலு, 68, கூறுகையில், ''எம்.எல்.ஏ., அலுவலகம் என்பது மக்கள் குறைகேட்க பயன்படுத்த வேண்டும். ஆனால், எம்.எல்.ஏ.,க்கள் யாரும், இக்கட்டடத்தை பயன்படுத்துவது கிடையாது. அப்பகுதியில் உள்ள தனிப்பட்ட நபர்கள்தான் பயன்படுத்துகின்றனர்,'' என்றார்.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மணி கூறுகையில், ''கடைவீதியில் உள்ள அரசு எம்.எல்.ஏ., அலுவலகக் கட்டடம் சேதமடைந்துள்ளது. பயன்படுத்த முடியாததால், அக்கட்டடத்தை அரசிடம் ஒப்படைத்து விட்டேன்,'' என்றார்.