ADDED : ஜூலை 04, 2024 11:05 AM
ஓமலுார்: ஓமலுார் வட்டத்தில் உள்ள ஓமலுார், கருப்பூர், மூங்கில்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, அரசுக்கு மனு அளித்திருந்தனர். அவர்களுக்கு மூங்கில்பாடி ஊராட்சி சோரையன்கரட்டில், இரு ஆண்டுகளுக்கு முன் பட்டா வழங்க அரசு உத்தரவிட்டது. அங்கு பாறைகள் உள்ளதால் அவற்றை அகற்றி பட்டா வழங்க, மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில் பாறைகள் அகற்றப்படாததோடு, பட்டா வழங்க தாமதம் செய்ததால், நேற்று மதியம், 12:30 மணிக்கு தாலுகா அலுவலகம் வந்த மாற்றுத்திறனாளிகள், ஓமலுார் வருவாய்த்துறையினரை கண்டித்து, மேட்டூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிக்கப்பட, ஓமலுார் போலீசார், தாசில்தார் ரவிக்குமார் பேச்சு நடத்தினர். பின் அனைவரும், தாலுகா அலுவலகம் சென்றனர். அங்கு, '3 நாட்களில் பாறைகளை அகற்றிவிட்டு நில அளவீடு செய்து முட்டுக்கல் நடப்படும்' என, தாசில்தார் கூறினார். இதனால் மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.