/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணையில் 1.70 லட்சம் கனஅடி உபரிநீர் திறப்பு
/
மேட்டூர் அணையில் 1.70 லட்சம் கனஅடி உபரிநீர் திறப்பு
மேட்டூர் அணையில் 1.70 லட்சம் கனஅடி உபரிநீர் திறப்பு
மேட்டூர் அணையில் 1.70 லட்சம் கனஅடி உபரிநீர் திறப்பு
ADDED : ஆக 02, 2024 01:10 AM
மேட்டூர்,
மேட்டூர் அணையின் 16 கண் மதகு வழியே, 1.48 லட்சம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., நேற்று முன்தினம், 43வது முறையாக அணை நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு வினாடிக்கு, 66,454 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று இரவு, 8:00 மணிக்கு, 1.70 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு அணை நிரம்பியதால் உபரிநீர், 16 கண் மதகு வழியே வெளியேற்றப்பட்டது. அதிகபட்சம் வினாடிக்கு, 60,000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது.
நேற்று காலை நீர்வரத்து அதிகரிக்க, 16 கண் மதகில், 1.03 லட்சம் கன அடியாகவும், இரவு, 8:00 மணிக்கு, 1.48 லட்சம் கனஅடியாகவும் அதிகரிக்கப்
பட்டது.
தவிர அணை மின் நிலையங்கள் வழியே, 21,500 கனஅடி, கால்வாயில், 500 கனஅடி என, 22,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதன்மூலம் மொத்தமாக, 1.70 லட்சம் கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. 16 கண் மதகில் பெருக்கெடுத்துச்சென்ற உபரிநீரை, மேட்டூர் தர்மபுரி நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் நின்று ஏராளமான மக்கள் ரசித்தனர்.
11 கலெக்டர்களுக்கு அறிக்கை
'எந்த நேரமும் வினாடிக்கு, 1.75 லட்சம் கனஅடி நீர் காவிரியில் திறக்க வாய்ப்புள்ளது. இதனால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும். அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் சார்பில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்பட, 11 மாவட்ட கலெக்டர்களுக்கு, நேற்று மீண்டும் அறிக்கை அனுப்பப்பட்டது.
தவிர மேட்டூர் நகராட்சி, சேலம் மாநகராட்சி, தெற்கு ரயில்வே திருச்சி பிரிவு மேலாளருக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
முகாமில் தங்க வைப்பு
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பகுதி காவிரி ஆற்றோரத்தில் நாட்டாகவுண்டம்புதுார், சந்தைப்பேட்டை, பாவடித்தெரு, சத்யா நகர், ஜனதா நகர், மீனவர் தெரு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு, 300க்கு மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து
வருகின்றனர்.
இந்நிலையில், மேட்டூர் அணை முழுமையாக நிரம்பி, அணைக்கு வரும் தண்ணீர் முழுதும் ஆற்றில் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பள்ளிப்பாளையம் பகுதி காவிரி ஆற்றோரம் உள்ள வீடுகளை தண்ணீர் தொட்டபடி கரைபுரண்டு ஓடுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிப்பாளையம் பகுதி காவிரி ஆற்றின் கரையோரத்தில் வசித்த மக்களை மீட்டு, நேற்று காலை, சந்தைப்பேட்டை பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்கள், வீட்டிலிருந்து ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டை மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து
வெளியேறினர்.
இந்நிலையில் நேற்று மாலை நீர்வரத்து அதிகரித்ததால், குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.28 லட்சம் கன அடியாக உயர்வு
கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடகாவிலுள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பி உள்ளது. தொடர் நீர்வரத்து அதிகரிப்பால் அணை பாதுகாப்பு கருதி, தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 70,750 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து வினாடிக்கு, 1,03,222 கன அடி என மொத்தம், 1,73,972 கன அடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு வினாடிக்கு 75,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மதியம், 3:00 மணிக்கு, 1.28 லட்சம் கன அடியாக
அதிகரித்தது.
தொடர் நீர்வரத்தால், ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ், மெயின் பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகள் மற்றும் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்தும், சத்திரம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை
தொட்டவாறும் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது. நேற்று, 16 வது நாளாக காவிரியாற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் தடை தொடர்கிறது. ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் வாகனங்கள், பென்னாகரம் அடுத்த மடம் செக்போஸ்டில், போலீசார் தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.
ஒகேனக்கல், அதையொட்டிய காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில், வருவாய் துறை, போலீசார், ஊரக வளர்ச்சி, தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
...............