/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீரன் சின்னமலை நினைவிடத்தில் மரியாதை
/
தீரன் சின்னமலை நினைவிடத்தில் மரியாதை
ADDED : ஆக 04, 2024 01:15 AM
சங்ககிரி, தீரன் சின்னமலை நினைவிடத்தில் அமைச்சர் நேரு, முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலையின், 219வது நினைவு நாளையொட்டி, சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரத்தில், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு, தமிழக அரசு சார்பில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, மலர்வளையம் வைத்து, மலர் துாவி மரியாதை செலுத்தினார். அதேபோல், சங்ககிரி - ஈரோடு பிரிவு சாலையில் உள்ள தீரன்சின்னமலை நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, எம்.பி.,க்களான, தி.மு.க.,வின் சேலம் செல்வகணபதி, கொ.ம.தே.க.,வின் நாமக்கல் மாதேஸ்வரன், சேலம் எஸ்.பி., அருண்கபிலன், தி.மு.க.,வின் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் உள்ளிட்டோரும் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.., அங்குள்ள இரு இடங்களில் அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், எம்.எல்.ஏ.,க்களான, சங்ககிரி சுந்தரராஜன், ஏற்காடு சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பா.ஜ., சார்பில் மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாவட்ட தலைவர் சுதிர்முருகன், மாவட்ட செயலர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பா.ம.க., சார்பில் மாநில கவுரவ தலைவர் மணி அஞ்சலி செலுத்தினார். எம்.எல்.ஏ., அருள், முன்னாள் மாவட்ட செயலர் அண்ணாதுரை, சங்ககிரி நகர செயலர் ஐயப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொ.ம.தே.க., சார்பில் எம்.எல்.ஏ., ஈஸ்வரன், கொங்கு வெள்ளாள கவுண்டர் பேரவை மாநில செயலர் சூரியமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு கொங்கு அமைப்பினர், அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் அஞ்சலி செலுத்தினர்.