/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இரட்டிப்பு பண மோசடி வழக்கில் 2 பேரின் 6 வங்கி கணக்குகள் முடக்கம்
/
இரட்டிப்பு பண மோசடி வழக்கில் 2 பேரின் 6 வங்கி கணக்குகள் முடக்கம்
இரட்டிப்பு பண மோசடி வழக்கில் 2 பேரின் 6 வங்கி கணக்குகள் முடக்கம்
இரட்டிப்பு பண மோசடி வழக்கில் 2 பேரின் 6 வங்கி கணக்குகள் முடக்கம்
ADDED : ஜன 28, 2025 07:25 AM
சேலம்: இரட்டிப்பு பண மோசடி வழக்கில், கைதாகியுள்ள இரண்டு பேரின், ஆறு வங்கி கணக்குகள் நேற்று முடக்கம் செய்யப்பட்டன.
சேலம் அம்மாபேட்டை, சிவகாமி திருமண மண்டபத்தில், புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளையை, வேலுாரை சேர்ந்த விஜயபானு, 48, என்பவர் நடத்தி வந்தார். அறக்கட்டளையில் பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி, ஆயிரக்கணக்கானோரிடம், கோடிக்கணக்கில் பணம் வசூலித்து வந்தனர்.
இதையறிந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், திருமண மண்டபத்தில் சோதனையிட்டு, அங்கீகாரம் இல்லாத திட்டத்தின் கீழ், முறைகேடு செய்து முதலீடாக பெறப்பட்ட, 12.65 கோடி ரூபாய், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். முறைகேட்டில் ஈடுபட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயபானு, ஜெயபிரதா, பாஸ்கர் ஆகியோரை கைது செய்து, கோவை டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நேற்று முன்தினம் விஜயபானுவின் உதவியாளரான, வேலுாரை சேர்ந்த சையத் மஹ்மூத்தை கைது செய்து, அவர் ஓட்டிய டெம்போ டிராவலர்ஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், அறக்கட்டளை நிர்வாகிகள் பெயரில் உள்ள, வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கும் நடவடிக்கையில், போலீசார் இறங்கினர். அனைத்து வங்கி மேலாளர்களுக்கும் இது குறித்த கடிதம் அனுப்பப்பட்டது.
நேற்று விஜயபானு, ஜெயபிரதா ஆகியோரின் ஆறு வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன. இந்த வழக்கில், இதுவரை அம்மாபேட்டை போலீசில், 77 பேரும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், 50 பேரும், 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளனர். மோசடியில் ஏஜென்டுகளாக பணிபுரிந்தவர்கள், அறக்கட்டளையில் பணிபுரிந்தவர்கள் என, 15க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

