/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் மாவட்டத்தில் 80 சமையலர் 'டிஸ்மிஸ்' நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை
/
சேலம் மாவட்டத்தில் 80 சமையலர் 'டிஸ்மிஸ்' நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை
சேலம் மாவட்டத்தில் 80 சமையலர் 'டிஸ்மிஸ்' நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை
சேலம் மாவட்டத்தில் 80 சமையலர் 'டிஸ்மிஸ்' நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை
ADDED : ஜூன் 05, 2025 01:43 AM
சேலம், நீதிமன்ற உத்தரவுப்படி, சேலம் மாவட்டத்தில், 80 சமையலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் விடுதிகள், உறைவிட பள்ளிகளில், 80 சமையலர் காலியிடம், 2015 - 16ல், முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்பட்டது. இன சுழற்சி விதியை மீறி முறைகேடாக பணி நியமனம் நடந்ததாக கூறி, ஓமலுார், முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்வம் உள்பட, 4 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில் பணி நியமனத்தை ரத்து செய்து தமிழக அரசு விதிப்படி, புதிதாக அறிவிப்பு வெளியிட்டு பணி நியமனம் செய்ய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனால் மனுதாரர்கள், கடந்த மார்ச், 28ல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். அதில் உரிய விதிமுறைகளை பின்பற்றி தகுதியான சமையலர்களுக்கு மட்டும் மறு நியமனம் வழங்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஜெயக்குமார், 80 சமையலரிடம் விளக்கம் கேட்டு, கடந்த ஏப்., 22ல் தனித்தனியே நோட்டீஸ் அனுப்பினார். பெரும்பாலான சமையலர்கள் திட்டமிட்டு, ஒரே மாதிரி அனுப்பிய பதில், அதிகாரிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
குறிப்பாக, 'சமையலர் பணி நியமனத்தில் விதிமுறைகள் பின்பற்றவில்லை என்றால், அதை சரி செய்ய வேண்டியது அரசு அலுவலர்களின் பணி. அதில் எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத என் பணி நியமனத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்வது, இயற்கை நீதிக்கு எதிரானது' என தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான, ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார், 'நீதிமன்ற உத்தரவுப்படி, 80 சமையலர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்' எனக்கூறி, அவர்கள் பெயர் பட்டியல் அடங்கிய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையேற்று, நீதிபதி ஆஷா, இந்த வழக்கை முடித்துவைத்தார்.
இதுகுறித்து ஜெயக்குமார் கூறுகையில், ''சமையலர், 80 பேருக்கும் பணி நீக்க உத்தரவு, தனித்தனியே தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, அவர்கள் பணியாற்றிய பள்ளிக்கு தகவல் தெரிவித்து, வீட்டு முகவரிக்கு தபால் அனுப்பியது உள்ளிட்ட எல்லா பணிகளும், கலெக்டர் வழிகாட்டுதல்படி மேற்கொள்ளப்பட்டது,'' என்றார்.