/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வனப்பகுதியில் சாலை அளவீடு செய்ய முடிவு
/
வனப்பகுதியில் சாலை அளவீடு செய்ய முடிவு
ADDED : அக் 23, 2024 01:48 AM
வனப்பகுதியில் சாலை
அளவீடு செய்ய முடிவு
பனமரத்துப்பட்டி, அக். 23-
பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை, சேலம் கூடுதல் கலெக்டர் லலித் ஆதித்ய நீலம்(ஊரக வளர்ச்சி) நேற்று ஆய்வு செய்தார். கம்மாளப்பட்டியில் நுாலகம் கட்டுதல், கதிரடிக்கும் களம், கான்கிரீட் சாலை, தார்ச்சாலை ஆகியவற்றை பார்வையிட்டார்.
தும்பல்பட்டி ஊராட்சி ஜல்லுாத்துப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்த அவர், பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட மதிப்பீடு தயாரித்து, பணி மேற்கொள்ள ஒன்றிய அதிகாரிகளை அறிவுறுத்தினார். ஜல்லுாத்துப்பட்டியில் இருந்து, 4 கி.மீ.,ல் அயோத்தியாப்பட்டணம், பெரிய கவுண்டாபுரம் ஊராட்சி உள்ளது. இந்த இரு ஊர்களை இணைக்க, வனப்பகுதியில், 3 கி.மீ., சாலை அமைக்க வேண்டும். அதற்குரிய சாத்தியக்கூறு குறித்து ஜல்லுாத்துப்பட்டி வனப்பகுதியில், மழையிலும் குடை பிடித்தபடி கூடுதல் கலெக்டர், ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன், பொறியாளர்களுடன் ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட வன அலுவலருடன் கூட்டு தணிக்கை செய்து, வனப்பகுதியில் ஜல்லுாத்துப்பட்டி - பெரியகவுண்டாபுரம் இணைப்பு சாலை அமைக்கும் இடத்தை சர்வே செய்ய முடிவு செய்தனர். இதன்மூலம் ஜல்லுாத்துப்பட்டி மக்கள், பெரியகவுண்டாபுரம் சென்று, சேலம் செல்லலாம். அப்போது, 25 கி.மீ., சுற்றி செல்லும் நேரம் குறையும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

