ADDED : அக் 26, 2025 01:13 AM
கி.பி., 1853ம் ஆண்டில், துாய திருத்துவ ஆங்கிலிக்கன் ஆலயம், ஏற்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் போதகர், சேலத்தில் உள்ள ஆங்கிலிக்கன் கிறிஸ்தவர்களுக்கு வேண்டிய ஆராதனை, ஞானஸ்நானம், திருமணம், அடக்கம் ஆகியவற்றை நடத்தி, 1875ம் ஆண்டு வரை பதிவு செய்து வந்தார். கி.பி., 1866ல், சேலம் நகரில் வாழும் ஆங்கிலிக்கன் சபையை சேர்ந்தவர்கள், ஆராதனை செய்ய, ஒரு ஆலயம் கட்ட தீர்மானித்தார்கள்.
அதற்கு சேலம் பழைய ஆங்கிலேயர் கல்லறை தோட்டம் எதிரே உள்ள இடத்தை, ஜெசி தாமஸ் போக்ஸ் அம்மையார் விட்டுக்கொடுக்க முன்வந்தார். ஏற்கனவே, அந்த இடத்தில் ஆங்கிலேய சீமான்கள், பில்லியர்ட்ஸ் விளையாடும் அரங்கு ஒன்று இருந்தது. அந்த அரங்கின் படிக்கட்டில், கி.பி., 1861ம் ஆண்டு, இந்திய நில அளவைத்
துறையினர் நடத்தி முடித்த திரிகோண நில அளவையின், சேலம் நகரின் மையம் குறிக்கப்பட்டிருந்தது.
அந்த நிலப்பகுதி, சேலம் நகரின் மையமான, முதல் திரிகோணத்துக்கு உட்பட்டு இருந்தது. அந்த இடமே ஆலயம் கட்ட உகந்ததாக, அப்போதைய ஆலய கட்டுமான குழுவினர், ஏகமனதாக
தீர்மானித்தனர். இந்த சேலம் நகரின் மைய பூமியில், கி.பி., 1871 செப்., 16ம் நாள் ஆலயம் கட்ட, அஸ்திவாரக்கல் பதிக்கப்பட்டது. கி.பி., 1875 அக்., 26ல் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, சென்னை பேராயரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 'கிறிஸ்து
நாதர் ஆலயம்' என பெயரிடப்பட்டது. இந்த சேலத்தின் மையம், தற்போது உள்ள விரிவாக்கப்பட்ட ஆலயத்தின் தொப்புள் போல் அதன் நடுப்பகுதியில் அமைந்துவிட்டது. 1996ம் ஆண்டு, இந்த ஆலய விரிவாக்கம், ஆலய கட்டுமான அமைப்பையும், பாணியையும் தழுவி வளர்ந்து வரும் திருச்சபையின் தேவைக்கேற்பவே செய்யப்பட்டது.
இந்த ஆலயத்தை ஆரம்பத்தில் கட்டியவர்களும், விரிவாக்கம் செய்தவர்களும், பராமரித்து வருபவர்களுமாக, எண்ணற்றோரின் பங்களிப்பாக இந்த ஆலயத்தில் நீங்கள், தற்போது பார்க்கும் கட்டுமானங்கள், கலைப்படைப்புகள், வரலாற்றின் சாட்சியாக உள்ளது, ஆண்டவர் இயேசுவின் மீது கொண்ட விசுவாசத்தின் வெளிப்பாடே அல்லாமல் வேறில்லை. இந்த விசுவாசமே இன்று, இந்த புனித ஸ்தலத்தில் வந்து நிற்கும் உங்களையும் ஆட்கொள்ள வேண்டும் என்பதே, எங்கள்
பிரார்த்தனை.

