/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண்ணை கொன்று எரித்த கள்ளக்காதலன், சிறுவன் கைது
/
பெண்ணை கொன்று எரித்த கள்ளக்காதலன், சிறுவன் கைது
ADDED : பிப் 04, 2024 02:45 AM

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி, மலையாளப்பட்டி பகுதியில் வல்லரசு என்பவர் வீடு எதிரே, நேற்று முன்தினம் மதியம், அடையாளம் தெரியாத பெண்ணின் உடல், பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.
வாழப்பாடி போலீசார் விசாரணையில், பெண், மயிலாடுதுறையை சேர்ந்த சுகுணா, 29, என, தெரிந்தது. அவரை, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை சேர்ந்த வல்லரசு, 35, கொலை செய்து உடலை எரித்ததும் தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார், அவரது உறவினரான, 17 வயது சிறுவனையும் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
கணவன், மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடால், மூன்றாண்டுகளாக சுகுணா தனியாக வசிக்கிறார்.
இவருக்கு கொல்லிமலை வல்லரசு என்பவருடன், இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு, கள்ளத்தொடர்பாக மாறியது.
வல்லரசு திருமணம் செய்து கொள்வதாக கூறியதால், சுகுணா, அவருடன் தங்கி உள்ளார்.
இரு நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் சுகுணா, தாய் வீட்டுக்கு செல்வதாக கூறியதால், ஆத்திரமடைந்த வல்லரசு, சுகுணாவை கத்தியால் குத்தி கொன்று, உடலை, அவரது உறவினரான, 17 வயது சிறுவனுடன் சேர்ந்து பட்டப்பகலில் வீடு முன் விறகுகளை வைத்து எரித்துள்ளார்.
வல்லரசு மீது ஏற்கனவே ஒரு பெண்ணை வெட்டிக்கொன்ற வழக்கு, சிறுமியை துன்புறுத்திய, 'போக்சோ' வழக்கு நிலுவையில் உள்ளன. அவர், கொல்லிமலையில் மந்திரவாதி என கூறி வந்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.