ADDED : ஜூன் 22, 2025 01:13 AM
சேலம், சர்வதேச யோகா தினத்தையொட்டி, சேலம் ரயில்வே கோட்ட அலுவலக கூட்ட அரங்கில், கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம் தலைமையில் ஊழியர்கள், நேற்று, யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். 'கதி சக்தி' முதன்மை திட்ட மேலாளர் கங்காராஜூ உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். சேலம் அரசு மருத்துவமனையில், டீன் தேவிமீனாள் தலைமையில் மருத்துவர்கள், யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
தேசிய சேவா சமிதி, மாத்ரு சக்தி யோகா அமைப்பு சார்பில், மரவனேரி, மாதவ வளாகத்தில், சேலம் ஏரோ ஸ்பேஸ் நிறுவன இயக்குனர் அன்பரசி தலைமையில் ஏராளமான பெண்கள், சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட யோகாசனங்களை செய்தனர்.
சேலம் ஆயுஷ்மான் ஜனசேவா அறக்கட்டளை சார்பில், அம்மாபேட்டையில், 'சர்க்கரை நோய் இல்லா பாரதம்' தலைப்பில், உலக சாதனை யோகா பயிற்சியாளர் பிரேம்குமார், மக்களுக்கு பல்வேறு ஆசனங்களை செய்து காட்டி பயிற்சி அளித்தார்.
இடைப்பாடி அரசு மருத்துவமனை சார்பில், தலைமை மருத்துவர் கோகுலகிருஷ்ணன் தலைமையில் கல்லுாரி, பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வாழப்பாடியில், டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில் போலீசார், யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.