/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கனமழையால் மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை விதிப்பு
/
கனமழையால் மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை விதிப்பு
கனமழையால் மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை விதிப்பு
கனமழையால் மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை விதிப்பு
ADDED : ஜூன் 27, 2025 01:47 AM
மேட்டூர், நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதே நேரம் ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையால் கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று முன்தினம் கபினியில், 25,000, கே.ஆர்.எஸ்., அணையில், 28,000 என, இரு அணைகளில் இருந்து வினாடிக்கு, 53,000 கனஅடி உபரிநீர், காவிரியில்
திறக்கப்பட்டது.
நேற்று காலை கபினியில், 30,000, கே.ஆர்.எஸ்.,ல், 35,000 என, வினாடிக்கு, 65,000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. இரவு, கே.ஆர்.எஸ்., அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், கபினியில் சரிந்தது. இதற்கேற்ப கபினி நீர்திறப்பு, 20,000, கே.ஆர்.எஸ்., உபரிநீர் திறப்பு, 53,000 என, இரு அணைகளில் இருந்து வினாடிக்கு, 73,000 கனஅடி நீர், காவிரியில் வெளியேற்றப்பட்டது.
பரிசல் இயக்க தடை
ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு வினாடிக்கு, 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, 34,000 கன அடியாகவும், மாலை, 6:00 மணிக்கு, 43,000 கன அடியாகவும் அதிகரித்தது. இரவு, 8:00 மணிக்கு, 50,000 கன அடியாக அதிகரித்தது.
நீர்வரத்து அதிகரிப்பால், குளிக்க, பரிசல் இயக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மெயின் பால்ஸ்க்கு செல்லும் நடைப்பாதை மீது, தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால், அங்குள்ள கேட்டுக்கு பூட்டு போட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அங்குள்ள மெயின் பால்ஸ், மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நீர்மட்டம் உயர்வு
ஏற்கனவே கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட நீர் வந்து கொண்டிருப்பதால், நேற்று காலை, வினாடிக்கு, 18,290 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, மாலை, 37,263 கனஅடியாக அதிகரித்தது. அதேநேரம் வினாடிக்கு, 20,000 கனஅடியாக இருந்த பாசன நீர் திறப்பு, நேற்று மதியம், 1:00 மணி முதல், 22,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
திறப்பை விட வரத்து அதிகரித்ததால் நேற்று காலை, 112.73 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், மாலை, 4:00 மணிக்கு, 113.05 அடியாக உயர்ந்தது. கர்நாடகா அணைகளின் உபரிநீர் திறப்பு அதிகரித்துள்ளதால், வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்வரத்து மேலும் உயரும்.