. அடிப்படை வசதி கேட்டு கத்தேரியில் மறியல் போராட்டம்
. அடிப்படை வசதி கேட்டு கத்தேரியில் மறியல் போராட்டம்
ADDED : நவ 25, 2025 02:24 AM
சங்ககிரி, சேலம் மாவட்டம், சங்ககிரி ஒன்றியத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி ஒன்றியம், கத்தேரி ஊராட்சி லட்சுமி நகர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 13 தெருக்கள் அடங்கியுள்ள இப்பகுதியில் சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. இந்நிலையில் கடந்த, 6 மாதங்களாக இப்பகுதி மக்களுக்கு, குடிநீர் வழங்காமல் ஊராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்துள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம், பலமுறை முறையிட்டும் வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை காலி குடங்களுடன், இப்பகுதி மக்கள், 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கத்தேரி ஊராட்சி செயலர் யுவராஜ், சாலைமறியல் செய்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'குடிநீர் குழாய் உடைந்து பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், தற்காலிகமாக டிராக்டர் வாகனங்களில் உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும்,' அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
