/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிரசவித்த பெண் இறப்பால் உறவினர்கள் சாலை மறியல்
/
பிரசவித்த பெண் இறப்பால் உறவினர்கள் சாலை மறியல்
ADDED : ஜன 04, 2024 11:47 AM
சேலம்: பிரசவித்த பெண் இறப்பால், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உறவினர்கள், மா.கம்யூ., கட்சியினருடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம், சிவதாபுரம், பெருமாம்பட்டியை சேர்ந்த வெள்ளி பட்டறை தொழிலாளி சூர்யா, 27. இவரது மனைவி மணிமேகலை, 25. இவர் கடந்த, 31 காலை பிரசவத்துக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. தாய், சேய் நலமாக இருந்த நிலையில் மணிமேகலைக்கு வயிற்றுப்போக்கு உண்டாகி, சிகிச்சை அளித்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
உறவினர்கள், முதல் தளத்தில் அதிதீவிர சிகிச்சை வார்டில் மணிமேகலையை பார்க்க முயன்றனர். அவர்களை தடுத்த காவலாளி மணிகண்டன், 40, என்பவரை தாக்கி, கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். அங்கு வந்த போலீசார், உறவினர்களை தடுத்தனர். இதனால் உள் தங்கும் மருத்துவ அலுவலரை சந்திக்க, அவரது அறைக்கு சென்றனர். அவர் பணியில் இல்லாததால் ஆவேசமடைந்த உறவினர்கள், மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போலீசார் பேச்சு நடத்தியும் பலனில்லை.
இதனால் பெண்ணின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள், நேற்று காலை, 10:50 மணிக்கு, மருத்துவமனை பிரதான நுழைவாயில் முன், மா.கம்யூ., மாவட்ட செயலர்
சண்முகராஜா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலக சந்திப்பில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மா.கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் பரமேஸ்வரி தலைமையில் உறவினர்கள், மருத்துவமனைக்கு எதிராக கோஷமிட்டு, சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கவும், டீன் பேச்சு நடத்தவும் வலியுறுத்தினர். ஒரு மணி நேர மறியலுக்கு பின், டீன் மணியுடன் அவரது அறையில் பேச்சு நடந்தது. இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து இறந்த பெண்ணின் தாய்மாமன் சண்முகம் கூறுகையில், ''மணிமேகலைக்கு செலுத்திய ஊசி மருந்து, அவரது உடலுக்கு ஏற்காததால் இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் கூறினர். வேறு வழியின்றி உடலை வாங்க ஒப்புக்கொண்டோம்,'' என்றார்.
மருத்துவர்கள் கூறுகையில், 'வீட்டில் இருக்கும்போதே மணிமேகலைக்கு பனிக்குடம் உடைந்துவிட்டது. அதை சிறுநீர் கழிப்பதாக நினைத்து சிகிச்சை அளிக்காமல் இருந்துவிட்டனர். மறுநாள் முருங்கப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து பின் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, குழந்தை பிறந்த நிலையில் அவரது உடல் சுகவீனமாகி இறந்துவிட்டார்' என்றனர்.