/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயில்வே துறையின் விபத்து ஒத்திகை பறந்த கலெக்டர் பாதியில் திரும்பினார்
/
ரயில்வே துறையின் விபத்து ஒத்திகை பறந்த கலெக்டர் பாதியில் திரும்பினார்
ரயில்வே துறையின் விபத்து ஒத்திகை பறந்த கலெக்டர் பாதியில் திரும்பினார்
ரயில்வே துறையின் விபத்து ஒத்திகை பறந்த கலெக்டர் பாதியில் திரும்பினார்
ADDED : ஆக 21, 2011 02:38 AM
சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட மாவெளிபாளையம் பகுதியில், டிராக்டர் மீது ரயில் மோதியதில் நான்கு பேர் பலியானது போன்று, விபத்து ஒத்திகையில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இந்த ஒத்திகை குறித்து, கலெக்டர் மகரபூஷணத்துக்கு முறைப்படி தகவல் தெரிவிக்காததால், சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் புடை சூழ பரபரப்புடன் கிளம்பிச் சென்றவர், ஒத்திகை என்று தெரிந்தவுடன், மீண்டும் கலெக்டர் அலுவலகம் திரும்பினார். சேலம் ரயில்வே கோட்டத்தில், அதிகாரிகள் உஷார் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை விபத்து ஒத்திகை நடத்தப்படும். அப்போது, எவ்வித முன்னறிவிப்புமின்றி, திடீரென குறிப்பிட்ட பகுதியில் ரயில் விபத்துக்குள்ளாகி, பலி சம்பவம் நடந்ததாக, அதிகாரிகள் தகவல் பரபரப்புவது வழக்கம்.
அதன்படி, சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சங்ககிரி - கொங்கணாபுரம் ரயில்வே இருப்பு பாதை வழித்தடத்தில் உள்ள மாவெளிபாளையம் பகுதியில், டிராக்டர் மீது ரயில் மோதியதில் நான்கு பேர் பலியானதாக தகவல் பரவியது. இந்த தகவல் அறிந்த ரயில்வே துறை அதிகாரிகள், மருத்துவ குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ரயில் விபத்து குறித்து பத்திரிக்கையாளர்களுக்கும் தகவல் கிடைக்க, அனைவரும் சம்பவ இடத்துக்குச் சென்றனர். ரயில் விபத்து சம்பவம் குறித்து கலெக்டர் மகரபூஷணத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, கலெக்டர் மகரபூஷணம், முதல்வர் தனிப்பிரிவில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
ரயில் விபத்தில் நான்கு பேர் பலியான சம்பவம் உண்மையென நம்பி, ஆர்.டி.ஓ., தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளை சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டார். மேலும், மருத்துவ குழுவினர், போலீஸ் துறையை உஷார் படுத்திய கலெக்டர் மகரபூஷணம், அதிகாரிகள் புடைசூழ சம்பவ இடத்தை நோக்கி காரில் புறப்பட்டுச் சென்றார். ரயில்வே துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் மகரபூஷணம் சம்பவ இடத்துக்கு வருவதாக தகவல் அளிக்கப்பட்டது. அப்போது, ரயில் விபத்து சம்பவம் வெறும் ஒத்திகை என்று ரயில்வே துறை அதிகாரிகள், கலெக்டரிடம் தெரிவித்தனர். கொண்டலாம்பட்டி பை-பாஸ் கடந்து சென்று கொண்டிருந்த கலெக்டர், ஒத்திகை என்று தெரிந்ததும் மீண்டும் கலெக்டர் அலுவலகம் திரும்பினார்.
பாட்டலிங் பிளான்ட், ரயில்வே துறைகளில், இதுபோன்ற ஒத்திகை சம்பவம் நடத்தும்போது, கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்வது வழக்கம். ஆனால், நேற்று ரயில்வே துறை அதிகாரிகள் விபத்து ஒத்திகை நடத்திய சம்பவம் குறித்து, கலெக்டர் மகரபூஷணத்துக்கு தகவல் தெரிவிக்காததால், இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

