/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்
/
முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்
ADDED : அக் 28, 2025 02:03 AM
ஆத்துார், ஆத்துார் அருகே, வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில் நேற்று, சூரசம்ஹார விழா நடந்தது. மாலை, 6:00 மணியளவில் பாலசுப்ரமணியருக்கு 16 வகை அபி ேஷக பூஜை நடந்தது. இரவு, 7:00 மணியளவில் சூரபத்திரன், அவனது தம்பி தாரகாசூரன், யானை மற்றும் சிங்க முகத்துடன் வந்த சூரபத்மனை, தன் வேல் கொண்டு பாலசுப்ரமணியர் வதம் செய்து, சேவல் மற்றும் மயிலாகவும் மாற்றிய நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பாலசுப்ரமணியர் கோவில் அடிவாரத்தில் வலம் வந்தார். மூலவர் பாலசுப்ரமணியர் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று தெய்வானை திருக்கல்யாணம், நாளை வள்ளி திருக்கல்யாணம் மற்றும் சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது.
* ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், சூரன் வதம் செய்வதை தத்ரூபமாக செய்தனர். பின், முத்துமலை முருகன் கோவிலை சுற்றி வலம் வந்தார். மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 146 அடி உயர முருகன் சிலை முன், ஏராளமானோர் வழிபாடு செய்தனர். இன்று முருகனுக்கு, திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. அதேபோல் ஆத்துார், கோட்டை பாலமுருகன், தம்மம்பட்டி திருமண்கரடு பாலதண்டாயுதபாணி, கெங்கவல்லி, தலைவாசல் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில், சூரசம்ஹார விழா நடந்தது.
* ஓமலுார், காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள செந்தில் ஆண்டவர் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நேற்று மாலை, 6:00 மணிக்கு நடந்தது. நங்கவள்ளியில் லட்சுமிநரசிம்மர் கோவில் சார்பில், பஸ் ஸ்டாண்ட் முன், சூரசம்ஹாரம் நடந்தது.
* தாரமங்கலம், சுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் பூக்களை தூவியும், அரோகரா கோஷம் முழங்கியும் பக்தி பரவசத்துடன் சுவாமியை தரிசித்தனர். தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலிலும் சூரசம்ஹார விழா நேற்று சிறப்பாக நடந்தது.
* சேலம், அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்ரமணி சுவாமி கோவிலில் நேற்று கந்த சஷ்டி பாராயணயத்தை, 36 முறை பக்தர்கள் பாடினர். மாலையில் மாட வீதியில் சூரசம்ஹார வைபவம் நிகழ்ச்சியில், முருகபெருமான் கோவில் முன்புறம் சூரனை வதம் செய்தார்.
* சுகவனேஸ்வரர் கோவிலில், முருகன், வள்ளி, தெய்வானைக்கு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

