/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சொத்துக்காக தந்தை கொலை மகன் உள்ளிட்ட 3 பேர் கைது
/
சொத்துக்காக தந்தை கொலை மகன் உள்ளிட்ட 3 பேர் கைது
ADDED : பிப் 11, 2025 05:23 AM
ஓமலுார்: சொத்து கொடுக்காத தந்தையை, வெட்டி கொலை செய்த மகன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், மணலுாரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி, 60. இவரது மனைவி கவுரம்மாள், 54. இவர்களுக்கு மூன்று மகன்கள், மகள் உள்ளனர்.
பொன்னுசாமி, கவுரம்மாள் ஆகியோர் இரு ஆண்டுகளாக, சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா, வி.மேட்டூரில் உள்ள முனிரத்தினம் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் தங்கி, வாட்ச்மேன் வேலை செய்து வந்தனர்.
பொன்னுசாமிக்கு, 80 சென்ட் நிலமும், கவுரம்மாளுக்கு, 1.5 ஏக்கர் நிலமும் உள்ளது. பொன்னுசாமிக்குரிய நிலங்களை, தன் மகன்களுக்கு வாய்மொழியாக பிரித்துக் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
இதில், இரண்டாவது மகன் சின்னசாமி, 34, கொத்தனார். இவர், தனக்கு வீடு கட்டியதால் கடன் அதிகமாக உள்ளதாகவும், அதனால் சொத்தை கிரயம் செய்து தரக்கோரி, அடிக்கடி தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், பொன்னுசாமி தரவில்லை. ஆத்திரம்அடைந்த சின்னசாமி, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு பொம்மிடியைச் சேர்ந்த தன் நண்பர்களான சீனிவாசன், அப்பு ஆகியோருடன் சென்று தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் தலை உள்ளிட்ட பட இடங்களில் வெட்டியதால், சம்பவ இடத்திலேயே பொன்னுசாமி உயிரிழந்தார்.
சத்தம் கேட்டு தடுக்க வந்த தாய் கவுரம்மாளையும் தலையில் தாக்கினர். பின், மூவரும் தப்பிச் சென்றனர். அருகில் உள்ளவர்கள், தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். படுகாயம்அடைந்த கவுரம்மாள் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவ இடத்தை ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் ஆய்வு செய்தார். தீவட்டிப்பட்டி போலீசார், சின்னசாமி உட்பட மூவரை பொம்மிடியில் வைத்து நேற்று அதிகாலை கைது செய்தனர்.