ADDED : நவ 11, 2025 01:58 AM
சேலம், சேலம் சூரமங்கலத்தில் பெட்ரோல் பங்க்கில் ஏற்பட்ட தகராறில், ஊழியரை கத்தியால் சரமாரியாக வெட்டிய, இரு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் ஜாகீர் அம்மாபாளையம், விஜயராகவாச்சாரியார் தெருவை சேர்ந்தவர் விஜய், 27. இவர் சூரமங்கலம் புதுரோடு, சுந்தர் நகரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 9:30 மணியளவில் இரு வாலிபர்கள் பெட்ரோல் அடிக்க, பைக்கில் வந்துள்ளனர். மரியாதை குறைவாக பேசியதால், ஊழியர் விஜய்க்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு வாலிபரை, விஜய் தாக்கியுள்ளார். அங்கிருந்து இருவரும் சென்றுவிட்டனர்.
சிறிது நேரத்தில் மீண்டும் அங்கு வந்த இரு வாலிபர்களும், அறையில் இருந்த ஊழியர் விஜயை வெளியே இழுத்து, சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் ஒருவர் கத்தியால், விஜயின் தலை, முகத்தில் வெட்டியுள்ளார். அதில், 7 இடங்களில் வெட்டு விழுந்துள்ளது. ஊழியர்கள் வரவும், இருவரும் தப்பிவிட்டனர். படுகாயமடைந்த விஜய், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இரு வாலிபர்களை தேடி வருகின்றனர்.

