/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண் தற்கொலை வழக்குதிருச்சி தோழனுக்கு வலை
/
பெண் தற்கொலை வழக்குதிருச்சி தோழனுக்கு வலை
ADDED : நவ 28, 2025 01:37 AM
சேலம், சேலத்தை சேர்ந்த பெண் தற்கொலை வழக்கில், திருச்சியை சேர்ந்த அவரது தோழன், புகைப்படத்தை, 'மார்பிங்' செய்து வெளியிடுவதாக மிரட்டியது தெரியவந்தது. இதனால் அவரை, போலீசார் தேடுகின்றனர்.
சேலம், கிச்சிப்பாளையம், ராகவேந்திரா நகரை சேர்ந்த மணிக்குமார் மனைவி அபிராமி, 32. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மகன், மகள் உள்ளனர். கடந்த ஆண்டு டிச., 23ல், அபிராமி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிச்சிப்பாளையம் போலீசார், அபிராமி மொபைல் போனில் கடைசியாக பேசியவர்களின் விபரங்களை சேகரித்து விசாரித்தனர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:திருச்சியை சேர்ந்த ஒருவர், அபிராமிக்கு மிரட்டல் விடுத்தது தெரிந்தது. தொடர்ந்து விசாரித்ததில், அவர், அபிராமியுடன் பள்ளியில் படித்த தர்மராஜ் என தெரிந்தது. இருவரும், 2023ல் நடந்த திருமண நிகழ்ச்சியில் சந்தித்தனர். பின் மொபைல் போனில் பேசி வந்தனர். இதை சாதகமாக்கி, அபிராமியுடன் தவறாக நடக்க தர்மராஜ் முயன்றார். இதை அறிந்து அவர் விலக, புகைப்படங்களை, 'மார்பிங்' செய்து, இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதில் வேதனை அடைந்த அபிராமி, தற்கொலை செய்து கொண்டார். இதனால் தற்கொலைக்கு துாண்டிய வழக்கில், தர்மராஜை தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

