ADDED : ஆக 28, 2024 07:35 AM
இளையான்குடி : முன்னாள் முதல்வர் பழனிசாமியை பா.ஜ., தலைவர் அண்ணாமலை அவதுாறாக பேசியதாக கூறி இளையான்குடியில் அ.தி.மு.க.,வினர் உருவ பொம்மையை எரித்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இளையான்குடி பேரூராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டையை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., நாகராஜன்,ஜெ பேரவை மாவட்ட செயலாளர் ராமு இளங்கோவன், இளையான்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் முனியாண்டி, ஒன்றிய செயலாளர்கள் பாரதிராஜன், கோபி, ஜெகதீஸ்வரன், நகரச் செயலாளர் நாகூர் மீரா மற்றும் வார்டு, கிளைச் செயலாளர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இளையான்குடி மெயின் பஜாரில் ஒன்றிய செயலாளர் கோபி நகரச் செயலாளர் நாகூர் மீரா தலைமையில் 50க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் பொதுச் செயலாளர் பழனிசாமியை அவதுாறாக பேசிய அண்ணாமலையை கண்டித்து அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது போலீசார் அவர்களை தடுத்தனர்.
அதனையும் மீறி அ.தி.மு.க., வினர் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்தனர்.இதனால் அ.தி.மு.க.,வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இது குறித்து வி.ஏ.ஓ., பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் ஒன்றிய செயலாளர் கோபி, நகரச் செயலாளர் நாகூர் மீரா, காரைக்குளம் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், நெஞ்சத்தூர் கிளைச் செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை: சிவகங்கை பா.ஜ., அலுவலகம் முன்பு முன்னாள் முதல்வர் பழனிசாமியை கண்டித்து பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நகர் தலைவர் எம்.ஆர்.உதயா தலைமை வகித்தார். ஓ.பி.சி., அணி மாநில செயற்குழு உறுப்பினர் நாகேஸ்வரன் முன்னிலை வகித்தார். மகளிர் அணி மாவட்ட பொது செயலாளர் ஹேமமாலினி நகர் பொது செயலாளர்கள் பாலா, சதீஸ் கலந்து கொண்டனர். பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பழனிசாமி உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
இதை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பா.ஜ., மீனவர் அணி நகர் செயலாளர் அழகர்சாமி கீழே விழுந்தார். பழனிசாமி உருவ படத்தை பா.ஜ.,வினர் எரித்தனர். போலீசார் தடுத்த பிறகு கலைந்து சென்றனர்.