ADDED : செப் 03, 2024 05:02 AM

சிவகங்கை, : அங்கன்வாடி மைய ஊழியர், உதவியாளருக்கு பதவி உயர்வு வழங்க கோரி சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இரவு வரை போராட்டம் நீடித்தது.
சிவகங்கை மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் கீழ் அங்கன்வாடி மையம், குறுவள மையம் செயல்படுகிறது. இந்த மையங்களில் ஊழியர், உதவியாளர்கள் பணிபுரிகின்றனர்.
குறுவள மையத்தில் பணிபுரியும் ஊழியர்களை முதன்மை அங்கன்வாடி மையத்திற்கும், உதவியாளர்களை அங்கன்வாடி மைய ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
2024 ஜனவரியை தகுதி நாளாக கொண்டு மாவட்ட அளவில் பணிபுரியும் 343 ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆனால், தொடர்ந்து 8 மாதமாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
நேற்று மாலை மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் நடத்தினர்.
சிவகங்கை மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் 173 அங்கன்வாடி, குறுவள மைய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் ஜெயமங்கலம் தலைமை வகித்தார். செயலாளர் பாக்கியமேரி முன்னிலை வகித்தார். துணை தலைவர்கள் எம்.சித்ரா, மலர், ஏ.தவமலர், இணை செயலாளர்கள் ராதா, பி.சித்ரா, காலைச்செல்வி உட்பட பதவி உயர்வு கிடைக்காத அனைவரும் பங்கேற்றனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துமாரியப்பன் கூறியதாவது:
2024 ஜனவரியை தகுதி நாளாக கொண்டு 173 பேருக்கு தான் பதவி உயர்வு வழங்க வேண்டும். தேர்தல் நடத்தை விதி காரணமாக காலதாமதம் ஆனது. இது குறித்து இயக்குனர் அலுவலகத்தில் தெரிவித்தோம். அங்கிருந்து விரைவில் பதவி உயர்வு வழங்குவதற்கான உத்தரவு அனுப்புகிறோம். அந்த உத்தரவு வந்த பின் தகுதியுள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்குமாறு தெரிவித்துவிட்டனர், என்றார்.