/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூரில் மார்ச் 13ல் வெண்ணெய் தாழி சேவை
/
திருக்கோஷ்டியூரில் மார்ச் 13ல் வெண்ணெய் தாழி சேவை
ADDED : மார் 11, 2025 04:57 AM
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உற்ஸவத்தை முன்னிட்டு மார்ச் 13ல் வெண்ணெய்த்தாழி சேவை அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளுகிறார்.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மாசி தெப்ப உற்ஸவம் மார்ச் 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
நேற்று காலை 8:20 மணிக்கு பெருமாள் தேரோடும் வீதிகளில் வலம் வந்தார். தொடர்ந்து காலை 9:30 மணிக்கு புதிய யானை வாகனம் வெள்ளோட்டம் நடந்தது. இரவில் பெருமாள் யானை வாகனத்தில் புறப்பாடாகி திருவீதி வலம் வந்தார். பின்னர் ஆண்டாள் சன்னதியில் பெருமாள் எழுந்தருளி மாலை மாற்றுதல் நடந்தது.
இன்று காலை 10:36 மணிக்கு தெப்பத்திற்கு முகூர்த்தக்கால் நடுதலும், மாலையில் ராஜகோபுரம் அருகில் பெருமாள் எழுந்தருளி சூர்ணாபிேஷகமும், இரவில் தங்கப்பல்லக்கில் திருவீதி உலாவும் நடைபெறும்.
9ம் திருநாளான மார்ச் 13 காலையில் வெண்ணெய்த்தாழி கண்ணன் அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி கோயிலிலிருந்து புறப்பாடு ஆகி தெப்பமண்டபத்திற்கு எழுந்தருளி மதியம் 12:50 மணிக்கு முட்டுத்தள்ளுதல் நடைபெறும். பின்னர் மீண்டும் தெப்ப மண்டபம் எழுந்தருளி பக்தர்கள் சுவாமி தரிசனம் துவங்கும். பின் இரவில் வெண்ணெய்தாழி கண்ணன் அலங்காரத்தில் பெருமாள் திருவீதி உலா நடைபெறும்.
பத்தாம் திருநாளான மார்ச் 14ல் மதியம் 12:16 மணியிலிருந்து 12:28 மணிக்குள் பகல் தெப்பமும், இரவு 10:00 மணிக்கு தெப்பம் கண்டருளலும் நடைபெறும். மறுநாள் காலையில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியும், இரவில் தங்கப்பல்லக்கில் திருவீதி உலாவுடன் உத்ஸவம் நிறைவடையும்.