/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இழப்பீடு தொகைக்காக 34 ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகள்
/
இழப்பீடு தொகைக்காக 34 ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகள்
இழப்பீடு தொகைக்காக 34 ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகள்
இழப்பீடு தொகைக்காக 34 ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகள்
ADDED : ஜூலை 25, 2024 04:34 AM

திருப்புவனம்: திருப்புவனம் அருகே அம்பலத்தாடி கிராமத்தில் கிருதுமால் நதியின் குறுக்கே சமரணை கட்ட நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு 34 ஆண்டுகளாக இழப்பீடு வழங்கப்படாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கிருதுமால் நதி மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் தொடங்கி சிவகங்கை, விருதுநகர் மாவட்டம் வழியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி குண்டாறில் இணைகிறது. மதுரை நகர் வழியாக வருவதால் நகரின் மொத்த சாக்கடையும் கிருதுமால் நதியில் திறந்து விடப்பட்டு மாசடைந்தது. விவசாயிகள் கோரிக்கையை அடுத்து கடந்த 1976ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., ஆட்சியில் மதுரை விரகனுார் மதகு அணையில் இருந்து பொதுப்பணித்துறை சார்பில் வெள்ளக்கால்வாய் வெட்டப்பட்டு கிருதுமால் நதியுடன் இணைக்கப்பட்டது.
1986ல் பணிகள் நிறைவடைந்த நிலையில் தவத்தாரேந்தல், நாங்கூர், கருவக்குடி உள்ளிட்ட விவசாயிகள் பயன்பெற அம்பலத்தாடி அருகிலும், பூம்பிடாகை அருகிலும் சமரணை கட்டப்பட்டது. இதற்காக 82 விவசாயிகள் 10 சென்ட் முதல் ஒன்றரை ஏக்கர் வரை நிலம் வரை கையகப்படுத்தப்பட்டு ஒரு கோடியே பத்து லட்ச ரூபாய் செலவில் சமரணை கட்டப்பட்டது.
விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இழப்பீடு தொகை வழங்கவே இல்லை. விவசாயிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து 2017ல் திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டு ஏக்கருக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டு 32 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மீதியுள்ள விவசாயிகளுக்கு இன்று வரை வழங்கப்படவில்லை.
கருவக்குடி கருப்பணன் கூறுகையில்: நிலம் வழங்கிய விவசாயிகளில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். அவர்களின் வாரிசுகள் இழப்பீடு கேட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லை என அதிகாரிகள் அலைக்கழித்து வருகின்றனர். கருவக்குடி வந்த அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும் மனு கொடுத்துள்ளோம், என்றார்.
பூம்பிடாகை மணி கூறுகையில்: 34 வருடங்களாக இழப்பீடு தொகைக்காக போராடி வருகிறோம், இன்று வரை வழங்கவில்லை. எங்களின் வாழ்வாதார நன்செய் நிலங்களை இழந்து தவித்து வருகிறோம், சமரணை கட்டியதுடன் சரி அதில் தண்ணீர் எப்போதாவது தான் வரும், மற்றபடி மதுரை நகரின்மொத்த சாக்கடையும் வருவதால் எங்களுக்கு குடிக்க கூட தண்ணீர் கிடைக்கவில்லை. நிலத்தடி நீரும் கெமிக்கலாக மாறிவிட்டது. சமரணையும் கருவேல மரங்கள் அடர்ந்து பயன்பாடே இன்றி உள்ளது. நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்: ஒரு சில நிலங்கள் புன் செய் நிலங்களாக இருப்பதால் இழப்பீடு தொகை தலைமைச் செயலகத்தில் தான் முடிவு செய்ய முடியும், அதன்படி இழப்பீடு தொகை முடிவு செய்யப்பட்டது, நிலம் வழங்கிய விவசாயிகளிடம் வாரிசு சான்று, நில உடமை சான்று உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லை, இதனாலேயே இழப்பீடு தொகை வழங்க முடியவில்லை, என்றனர்.