/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சுடுமண் வடிகுழாய் கீழடியில் கண்டுபிடிப்பு
/
சுடுமண் வடிகுழாய் கீழடியில் கண்டுபிடிப்பு
ADDED : ஜூலை 31, 2024 01:03 AM

சென்னை:சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடக்கும் அகழாய்வில், சுடுமண் வடிகுழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
தமிழக தொல்லியல் துறை, சிவகங்கை மாவட்டம் கீழடி உள்ளிட்ட எட்டு இடங்களில் அகழாய்வு செய்கிறது. கீழடியில் இந்தாண்டு 10ம் கட்ட அகழாய்வு நடக்கிறது. இங்கு ஏற்கனவே கிடைத்த தொல்பொருட்கள், நகர நாகரிகம் இருந்ததை உறுதி செய்துள்ளன.
இங்கு, கி.மு., 6ம் நுாற்றாண்டை சேர்ந்த பானை ஓடுகளில், எழுத்து பொறிப்பு உள்ளதால், 2,700 ஆண்டுகளுக்கு முன்னரே, இங்கு கல்வியறிவுடன் மக்கள் வாழ்ந்ததும், வடிகால், சுருள் குழாய்கள், உருளை குழாய்கள் வாயிலாக நீர் மேலாண்மை செய்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், நேற்று நடந்த அகழாய்வில், ஆறு உருளை வடிவ சுடுமண் உறைகள் ஒன்றுக்குள் ஒன்று நேர்த்தியாக பொருத்திய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. உறையின் நீளம் 36 செ.மீ., ஆகவும், அகலம் 18 செ.மீ., ஆகவும் உள்ள நிலையில், இதுவரை வெளிப்பட்டுள்ள குழாயின் நீளம், 174 செ.மீ., ஆகும்.
இந்த வடிகால் குழாய், அடுத்த அகழாய்வு குழிக்குள் செல்வதால், மொத்த நீளம் தெரியவில்லை.
அதை அகழாய்வு செய்யும் பணி துவங்க உள்ளது. இந்த சுடுமண் குழாய், தமிழர்கள், சங்க காலத்திலேயே மேம்பட்ட நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர் என்பதை உணர்த்துகிறது.
கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுடுமண் வடிகுழாய் அமைப்பு.