/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அடிப்படை வசதி இல்லாத களத்துார் கிராமம்
/
அடிப்படை வசதி இல்லாத களத்துார் கிராமம்
ADDED : மே 08, 2024 05:31 AM
சாலைக்கிராமம், : சாலைக்கிராமம் அருகேயுள்ள களத்துார் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளான ரோடு மற்றும் பஸ் வசதி செய்து தர வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சாலைக்கிராமம் அருகே உள்ள களத்துார் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமம் மாவட்டத்தின் கடை கோடியில் உள்ளதால் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதி கிடைப்பதில்லை.
இக்கிராமத்தில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்வதற்கு 3 கிலோமீட்டர் துாரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்வதற்கு கூட வழி இல்லாத சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது.
கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
களத்துார் கிராமத்திலிருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்வதற்கோ அல்லது இளையான்குடியில் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்கோ மற்றும் பிற ஊர்களுக்கோ செல்வதற்கு கூட 3 கி.மீ., துாரம் நடந்து சென்று தான் பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. ரோடு அமைக்கப்பட்டு நீண்ட காலம் ஆகிவிட்டதால் நடந்து செல்வதற்கு கூட மக்கள் அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே மாவட்ட கலெக்டர் கிராம மக்களின் நலன் கருதி களத்தூர் கிராமத்திலிருந்து சாத்தனூர் விலக்கு முதல் ஆர்.எஸ்., மங்கலம் விலக்கு வரை புதிதாக ரோடு அமைத்து பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

