ADDED : ஜூன் 15, 2024 06:50 AM
திருப்புவனம் : திருப்புவனத்தில் தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள், அறுந்து கிடக்கும் மின்கம்பிகளில் சிக்கி கால்நடைகள் உயிரிழப்பதால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் மடப்புரம், மணல்மேடு, பெத்தானேந்தல், கீழடி, கொந்தகை, அல்லிநகரம் உள்ளிட்ட கிராமங்களில் ஆடு, மாடு கோழி வளர்ப்பு அதிகம் நடைபெறுகிறது. விவசாய காலங்கள் தவிர மற்ற காலங்களில் விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் தான் அதிகளவு கால்நடைகள் உள்ளன. கறவை மாடுகளும் அதிகமாக இருப்பதால் காரைக்குடி ஆவின் நிறுவனத்திற்கு இங்கிருந்து அதிகளவு பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
விவசாயிகள் கால்நடைகளுக்கு தீவனங்கள் வழங்குவதுடன் மேய்ச்சலுக்கு வயல்கள், வைகை ஆற்றங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து செல்வது வழக்கம்.
வயல்கள் உள்ளிட்ட பகுதிகளில் மின்கம்பிகள் பல தாழ்வாகவும் சேதமடைந்த நிலையிலும் உள்ளன. லேசான காற்றுக்கே மின்கம்பிகள் அறுந்து விடுகின்றன. இது தெரியாமல் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் அதனை மிதித்து உயிர்இழப்பு ஏற்படுகின்றன.
நேற்று முன்தினம் பெத்தானேந்தலைச் சேர்ந்த கண்ணன் என்பவரது கறவை மாடு, கன்றுகுட்டியுடன் மேய்ச்சலுக்கு சென்ற போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் உயிரிழந்தது. ஏற்கனவே தீவன விலையேற்றம், மேய்ச்சல் நிலம் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கால்நடை வளர்ப்பை கைவிடும் நிலையில் உள்ள விவசாயிகள் கால்நடைகள் உயிரிழப்பு அதிகரித்து வருவதால் அச்சமடைகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் இறந்து போன கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.