ADDED : செப் 06, 2024 05:01 AM

திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் குரு ஸ்தலம் என போற்றப்படுகிறது. நேற்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் பண்டைய காலத்தில் திருப்புவனத்தில் சிவபெருமான் சித்தர் வடிவத்தில் உபதேசம் செய்ததால் குரு ஸ்தலமாக திருப்புவனம் போற்றப்படுகிறது. வியாச முனிவரின் சீடர்களான மாத்தியந்தன முனிவரும், தியானகட்ட முனிவரும் நான்கு வேதங்களையும், முக்காலத்தையும் அறிந்த பின் சிவபெருமானிடம் உபதேசம் பெற திருப்பூவணம் நகரம் சிறந்த இடம் என கருதி தேவ வருடம் 100 வரை தவம் செய்தனர்.
இவர்களது தவத்தை மெச்சிய சிவபெருமான் மதுரை சோமசுந்தரரேஸ்வரர் வடிவில் வந்து ஐந்தெழுத்து பிரணவ மந்திரத்தை உபதேசித்ததாக கூறப்படுகிறது. எனவே திருப்புவனம் நகரத்திற்கு சதுர்வேதபுரம் என்ற பெயரும் உண்டு, அருகில் உள்ள கொந்தகை இதன் மூலமாகவே சதுர்வேதிமங்களம் என அழைக்கப்பட்டது. திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சன்னதிக்கு மேலே உள்ள கோபுரத்தில் சோமசுந்தரேஸ்வரர் சித்தர் வடிவில் வந்ததற்கு சாட்சியாக சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.