/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
13 வயதில் தொடங்கிய ஓட்டம்; 70 பதக்கம் பெற்ற எஸ்.ஐ.,
/
13 வயதில் தொடங்கிய ஓட்டம்; 70 பதக்கம் பெற்ற எஸ்.ஐ.,
13 வயதில் தொடங்கிய ஓட்டம்; 70 பதக்கம் பெற்ற எஸ்.ஐ.,
13 வயதில் தொடங்கிய ஓட்டம்; 70 பதக்கம் பெற்ற எஸ்.ஐ.,
ADDED : மார் 27, 2024 06:55 AM

திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த போலீஸ் எஸ்.ஐ., கிருஷ்ணமூர்த்தி 54, தடகளத்தில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர், 54 வயதிலும் 20 வயது வாலிபர் போல உற்சாகமாக உள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வருகிறார். காவல்துறை சார்பாக நடந்த பல்வேறு போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
2017 முதல் 2023 வரை ஆறு வருடங்களில் மூன்று தங்கப்பதக்கங்களும், மூன்று வெண்கல பதக்கங்களும் பெற்றுள்ளார். 2014 முதல் 2024 வரை வரை மாநில அளவில் நடந்த 14 தடகள போட்டிகளில் 13 தங்கமும், ஒரு வெள்ளி பதக்கமும் வென்ற இவரை தமிழக முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிசாமி, ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் அழைத்து பாராட்டியுள்ளனர்.
சாதனையாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்; சென்னை பரங்கிமலை தான் எனது பல சாதனைகளுக்கு சொந்தம், தந்தை ரயில்வே துறையில் பணியாற்றியதால் பரங்கிமலையில் குடியிருந்தோம், பள்ளி படிப்பின் போது அருகில் இருந்த ராணுவ பயிற்சி பள்ளியில் டென்னிஸ் விளையாடும் அதிகாரிகளுக்கு பந்துகளை எடுத்து தரும் பணியை நானும் எனது நண்பனும் செய்தோம்.
விடுமுறை தினங்களில் மலையில் ஏறி, இறங்குவது தான் எனது வழக்கம், தடகள போட்டிகளில் ஆர்வம் காட்டினேன். பிளஸ் 2 படிக்கும் போது பள்ளியில் நடந்த 1500 மீ., ஓட்டப்பந்தயத்தில் 2ம் இடம் பெற்றது எனக்கு திருப்புமுனையாக இருந்தது. அதன்பின் கல்லுாரி அளவில் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றேன். 1993ல் நடந்த காவலர் தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தது முதல் இன்று வரை ஓட்டம் தான். 2005 முதல் 2012 வரை எந்த போட்டியிலும் பங்கேற்க முடியாதபடி இடைவெளி விழுந்தது. அதன்பின் மதுரை வந்த பின் பயிற்சி காரணமாக மீண்டும் போட்டிகளில் பங்கேற்க தொடங்கினேன்.
ரேஸ் வாக் எனப்படும் நடைபோட்டியில் காவல்துறையினருக்கான சர்வதேச போட்டியில் தங்கம் வென்றேன். இன்று வரை 71 பதக்கங்கள், 10 பரிசு கோப்பைகள், 21 கேடயங்கள், இரண்டு பணமுடிப்பு பெற்றுள்ளேன்.
விளையாட்டில் முழு மூச்சாக ஆர்வம் காட்டினால் வெற்றி கைக்கெட்டும் துாரம்தான், என்றார்.

