ADDED : ஜூன் 22, 2024 01:52 AM

சிவகங்கை:தமிழகத்தில் பராமரிப்பின்றி அரசு பஸ்கள் விபத்திற்குள்ளாகி வரும் நிலையில், சிவகங்கையில் பஸ்சை எடுத்தபோதே, பிரேக் பிடிக்காததால், துாணில் மோதி விபத்திற்குள்ளானது.
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநகர், டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சமீப காலமாக போக்குவரத்து கழக கிளைகளில் முறையான பராமரிப்பின்றி பஸ்கள் அடிக்கடி பழுதாவது, விபத்திற்கு உள்ளாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. நேற்று சிவகங்கை அரசு போக்குவரத்து கழக கிளையைச் சேர்ந்த மதுரை --- ஆர்.எஸ்.மங்கலம் சென்ற அரசு பஸ் (டி.என்.,68 என்: 0605)யை டிரைவர் பெருமாள், சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆர்.எஸ்.மங்கலத்திற்கு செல்ல எடுத்துள்ளார்.
குறுக்கே பயணிகள் நடந்து சென்றதால் பிரேக் பிடித்தார். ஆனால், 'பிரேக்' பிடிக்காமல், அருகில் இருந்த பஸ் ஸ்டாண்ட் வளாக துாணில் மோதி நின்றது.
முன்பக்க கண்ணாடி முற்றிலும் சேதமடைந்தது. பயணிகளுக்கு பாதிப்பு இல்லை.