/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மின் இணைப்பை துண்டித்த வாரியம் ரூ.20 ஆயிரம் வழங்க உத்தரவு
/
மின் இணைப்பை துண்டித்த வாரியம் ரூ.20 ஆயிரம் வழங்க உத்தரவு
மின் இணைப்பை துண்டித்த வாரியம் ரூ.20 ஆயிரம் வழங்க உத்தரவு
மின் இணைப்பை துண்டித்த வாரியம் ரூ.20 ஆயிரம் வழங்க உத்தரவு
ADDED : ஆக 28, 2024 04:03 AM
சிவகங்கை : சேவை குறைபாட்டிற்காக மின் வாரியத்திற்கு சிவகங்கை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
தேவகோட்டை நத்தர் சாஹிப் மனைவி ரகமத்காமிலா. இவர் தேவகோட்டை ஒத்தக்கடையில் மளிகை கடை நடத்தி வருகிறார். 2023 அக்.3ம் தேதி ரகமத்காமிலா கடைக்கு ரூ.29 ஆயிரத்து 532 மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மின் வாரியத்தால் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. ரகமத்காமிலா இது குறித்து 2023 அக் 28ம் தேதி தேவகோட்டை உதவி மின் பொறியாளருக்கும், காரைக்குடி மின் செயற்பொறியாளருக்கும், சிவகங்கை கலெக்டர், மின்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு தபால் மூலம் புகார் அனுப்பினார்.
மின்கட்டணம் ரூ. 29ஆயிரத்து 532 கட்ட வேண்டும். இல்லாவிடில் பீஸ் கட்டையை எடுத்து விடுவோம் என 2023 நவ., 8, 9, 10 தேதிகளில் மிரட்டி சேவை குறைபாடு செய்துள்ளனர். 2023 நவ.,16ல் தேவகோட்டை உதவி மின் பொறியாளர் அலுவலக ஊழியர்கள் ரகமத்காமிலா கடையின் மின் இணைப்பை துண்டித்தனர்.
ரகமத்காமிலா நஷ்டஈடு ரூ.3 லட்சம் கேட்டு செயற்பொறியாளர், தலைமையிடம், மின் வாரிய அலுவலகம் காரைக்குடி மற்றும் உதவி செயற்பொறியாளர் மின் வாரிய அலுவலகம் தேவகோட்டை ஆகியோர் மீது 2024 ஜன., 10 ல் சிவகங்கை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். ஆணைய தலைவர் பாலசுப்ரமணியம், உறுப்பினர் குட்வின் சாலமோன்ராஜ் விசாரித்தனர்.
ரகமத்காமிலா 331 யூனிட்டிற்கான தொகையை மின் வாரியத்திடம் செலுத்த வேண்டும். அதேபோல் ரகமத்காமிலாவுக்கு மின் இணைப்பு துண்டித்து சேவை குறைபாடு செய்ததால் மின் இணைப்பு துண்டித்த 2023 நவ.16ம் தேதியிலிருந்து மின் இணைப்பு கொடுக்கும் தேதி வரை நாள் ஒன்றுக்கு ரூ.200 வீதம் இழப்பீடு தொகையாக மின்சார வாரியம் கொடுக்க வேண்டும்.
சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.20 ஆயிரம். வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும். உத்தரவிட்ட தேதியிலிருந்து 7 நாட்களுக்குள் ரகமத்காமிலா கடைக்கு மின் இணைப்பு கொடுத்துவிட்டு, மின் இணைப்பு கொடுத்த தகவலை எழுத்து மூலமாக மின்சார வாரியம் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும்.
தீர்ப்பு வழங்கிய 30 நாட்களுக்குள் உத்தரவிடப்பட்ட தொகையை கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் உத்தரவிட்ட தேதியிலிருந்து செலுத்தும் தேதி வரை ஆண்டிற்கு 9 சதவீத வட்டியுடன் சேர்த்து கொடுக்க வேண்டும் தலைவர், உறுப்பினர் உத்தரவிட்டனர்.

