/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நிலப்பிரச்னையால் வட்டார வள மையத்திற்கு பூட்டு
/
நிலப்பிரச்னையால் வட்டார வள மையத்திற்கு பூட்டு
ADDED : செப் 28, 2024 02:36 AM

திருப்புவனம்:திருப்புவனம் அரசு ஆண்கள் பள்ளி எதிரே உள்ள விளையாட்டு மைதானம் மற்றும் வட்டார வளமைய இடத்திற்கு சொந்தம் கொண்டாடியவர் பூட்டு போட்டு பூட்டினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீஸ் லயன் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் 50. இவரது விவசாய நிலம் திருப்புவனம் பழையூரில் உள்ளது. இதனை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனைக்கு முயன்றுள்ளார். உரிய அனுமதி கிடைக்கவில்லை. இதே போல வடகரை அருகே இவருக்கு சொந்தமான நிலத்தில் ஏற்பட்ட பிரச்னை குறித்து வருவாய்த்துறையிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை.
திருப்புவனம் அரசு ஆண்கள் பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு செல்ல வழி தேவைப்பட்டதால் சொக்கலிங்கத்தின் முன்னோர் நிலத்தை பல ஆண்டுகளுக்கு முன் வழங்கினர். அந்த நிலத்திற்கு உரிய ஆவணங்கள் சொக்கலிங்கம் வசம் தான் உள்ளன.
இந்நிலையில் விளையாட்டு மைதானம் தன்னுடையது எனக் கூறி சொக்கலிங்கம் நேற்று காலை 9:00 மணிக்கு பூட்டு போட்டு பூட்டினார். மைதானத்தை ஒட்டி வட்டார வள மையமும் செயல்படுவதால் அதற்கும் செல்ல முடியவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த திருப்புவனம் போலீசார் இடப்பிரச்னை குறித்து வருவாய்த்துறை, நீதிமன்றம் மூலம் தான் தீர்வு காண முடியும், அரசு அலுவலகங்களை பூட்டக்கூடாது என அறிவுறுத்தியதையடுத்து காலை 10:00 மணிக்கு அலுவலகத்தை திறந்து விட்டார். பின்னர் போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
ஏற்கனவே கல்வித்துறைக்கு தன்னுடைய மூதாதையர் இலவசமாக இடம் வழங்கியும் தன்னுடைய மனைவிக்கு அரசு பணி வழங்கவில்லை என கூறி இதே வட்டார வள மைய அலுவலகத்தை இவர் பூட்டியுள்ளார். இது போன்று பல இடங்களில் தானமாக பள்ளி இடங்களுக்கு பெயர் மாற்றாமல் இருப்பதால் இது போன்ற பிரச்னைகள் அடிக்கடி எழுகிறது.