/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பஸ்சில் பில்லிங் மெஷினுக்கு சார்ஜர் இன்றி திணறல்: தொலைதுார பஸ் கண்டக்டர்கள் தவிப்பு
/
பஸ்சில் பில்லிங் மெஷினுக்கு சார்ஜர் இன்றி திணறல்: தொலைதுார பஸ் கண்டக்டர்கள் தவிப்பு
பஸ்சில் பில்லிங் மெஷினுக்கு சார்ஜர் இன்றி திணறல்: தொலைதுார பஸ் கண்டக்டர்கள் தவிப்பு
பஸ்சில் பில்லிங் மெஷினுக்கு சார்ஜர் இன்றி திணறல்: தொலைதுார பஸ் கண்டக்டர்கள் தவிப்பு
ADDED : நவ 11, 2024 04:24 AM

தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் டிக்கெட் கிழித்து தருவதற்கு பதிலாக பில்லிங் மெஷின்கள் வழங்கப்பட்டன. இவை எடை அதிகமாகவும், கையாள்வதற்கு சிரமமாக இருப்பதாகவும், பில்லில் உள்ள எழுத்துகள் விரைவில் அழிந்து விடுவதாகவும் புகார் எழுந்தது. இதன் காரணமாக புதிய மெஷின்கள் வழங்கப்பட்டுள்ளன.
காரைக்குடி கோட்டத்திற்கு உட்பட்ட சிவகங்கை, திருப்புத்துார், பரமக்குடி உட்பட 11 கிளைகளில் இருந்து கோயம்புத்துார், தேனி, கம்பம், திருப்பூர், திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தொலை தூர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பணியாற்றும் 400க்கும் மேற்பட்ட கண்டக்டர்களுக்கு வழங்கியுள்ளனர். மதுரை -- ராமேஸ்வரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்களில் புதிய பில்லிங் மெஷின் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் புதிதாக இயக்கப்படும் மஞ்சள் நிற அரசு பஸ்களை தவிர மற்ற பஸ்களில் சார்ஜ் போடும் வசதி இல்லை. ஒரு முறை சார்ஜ் செய்தால் குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் பயன்படுத்தும் அளவிற்கு இருக்க வேண்டும்.
பழைய மெஷின்களில் இரண்டு நாட்களுக்கு சார்ஜ் நிற்கும். புதிய மெஷின்களில் சார்ஜ் குறைந்த நேரமே நிற்பதால், பஸ்கள் நிற்கும் இடங்களில் கண்டக்டர்கள் சார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் பஸ்கள் நிறுத்தப்படும் நேரத்தில் ஓய்வு எடுக்க முடியாமலும், பிற பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல் தவிக்கின்றனர்.
இது குறித்து கண்டக்டர்கள் கூறியதாவது: புதிய மெஷினை நன்கு படித்தவர் மட்டுமே கையாள முடியும். சார்ஜ் போட பஸ்களில் வசதியில்லை. பணி முடிந்து மெஷினை கிளை அலுவலகத்தில் ஒப்படைத்து சென்றாலும், சார்ஜ் போட மாட்டார்கள்.
ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பூர் வரை இயக்கப்படும் பஸ்களில் மதுரையை கடந்ததும் சார்ஜ் காலியாகிவிடும். எனவே டிக்கெட் கிழித்து வழங்குவதுடன் இன்வாய்ஸ் எழுதுவதும் சிரமம் ஏற்படுகிறது. புதிய மெஷினை பயன்படுத்த பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து பஸ்களிலும் சார்ஜர் வசதி செய்து தர வேண்டும், என்றனர்.
இது குறித்த அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து இடங்களிலும் க்யூஆர் கோடு வசதி வந்து விட்டது. எதிர்காலத்தில் பஸ்களிலும் பயன்படுத்த வசதியாக புதிய பில்லிங் மெஷின் வழங்கியுள்ளோம். பஸ்களில் சார்ஜர் வசதி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம், என்றனர்.