ADDED : மார் 02, 2024 05:01 AM

எஸ்.புதுார் : எஸ்.புதுார் அருகே கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள்மறுபடியும் இயக்கப்படாததால், மாணவர்கள், விவசாயிகள் அவதிக்குஉள்ளாகின்றனர்.
எஸ்.புதுார் ஒன்றியத்தில்கொரோனா பரவல் காலகட்டத்தில் பல்வேறு அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில்தமிழகம் முழுவதும் அனைத்து பஸ்களும் மீண்டும் இயக்கப்பட்டன.
ஆனால் இவ்வொன்றியத்தில் கே.நெடுவயல் சுற்றுவட்டார பகுதியில் இயக்கப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்காததால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக பொன்னமராவதியில் இருந்து சிங்கம்புணரி, துவரங்குறிச்சி, திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு ஓடிய பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
கே.நெடுவயல் எம்.வெள்ளைச்சாமி கூறுகையில், பொன்னமராவதியில் இருந்து ப.நடுவயல், கே.நெடுவயல், எஸ்.புதூர், கிழவயல், தர்மபட்டி, துவரங்குறிச்சி வழியாக திருச்சிக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை இயக்கப்பட்ட பஸ்களும், பொன்னமராவதியில் இருந்து கே.நெடுவயல் வழியாக சிங்கம்புணரிக்கு இயக்கப்பட்ட பஸ்களும் கொரோனா காலத்தில் நிறுத்தினர்.
அதற்கு பின் இந்த பஸ்களை இயக்கவில்லை. இதனால் கே.நெடுவயலை சுற்றியுள்ள 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாணவர்கள், விவசாயிகள் கடும் அவதி அடைகிறோம்.
மாணவர்கள் வாடகை வேன் உள்ளிட்ட வாகனங்களில் பாதுகாப்பாற்ற முறையில் பள்ளிக்கு செல்கின்றனர். பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும், என்றார்.

