ADDED : மார் 10, 2024 06:33 AM
தேவகோட்டை : தேவகோட்டை நகராட்சியில் தடை செய்த பாலிதீன் பைகள் புழக்கம்அதிகரித்துவிட்டதாக, கவுன்சில் கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.
தேவகோட்டை நகராட்சி கவுன்சில் கூட்டத்திற்கு தலைவர் சுந்தரலிங்கம் (அ.தி.மு.க.) தலைமை வகித்தார். துணை தலைவர் ரமேஷ் (அதி.மு.க.), கமிஷனர் பார்கவி முன்னிலை வகித்தனர்.
விவாதம் வருமாறு:
அகிலாகுமாரி (அ.தி.மு.க): பெருமாள் கண்மாயில் அள்ளிய குப்பையில் அதிகளவு தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகள் இருந்தன. ஒன்றரை ஆண்டுக்கு முன் பாலிதீன் பயன்பாடு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இன்று தாராளமாக பாலிதீன் புழங்குகிறது.
தலைவர்: வியாபாரிகளை நேரடியாக அழைத்து பேசுவோம். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முத்தழகு (அ.தி.மு.க.): பல ஆண்டுகளாக எரிந்த விளக்கு எரியாமல், மின்இணைப்பு இல்லை என தெரிவிக்கின்றனர்.
தலைவர்: நகரில் 4,500 விளக்குகளில் 3 ஆயிரம் விளக்குகளுக்கு அனுமதி வந்தது. கூடுதல் விளக்குகளுக்கு டெண்டர் வைப்போம். அனுமதி வரும் வரையில் டியூப் லைட் பொருத்தவேண்டும்.
அய்யப்பன் ( அ.தி.மு.க.): சர்வேயரை பார்த்து ரொம்ப காலமாகி விட்டது. எங்கள் வார்டில் போட்ட ரோட்டில் சரியாக தார் கலக்காததால் ரோடு பெயர்ந்து விட்டது. நாங்கள் இதுக்கு படித்து விட்டு வரவில்லை. அதிகாரிகளுக்கு தான் கலவை பற்றி தெரியும். அதிகாரிகள் ரோடு போடும் போது கண்காணிக்க வேண்டும். தெருவிளக்குக்கான புதிய மின்கம்பி போட வேண்டும்.
வடிவேல் முருகன் ( அ.தி.மு.க.) : மீன்கடை கழிவுகளை நகருக்கு வெளியே கொட்ட சொல்லுங்கள். சாக்கடை கால்வாய் சுத்தம் செய்வதில்லை.
ரமேஷ், துணை தலைவர்: கல்லூரி சாலை முனையில் குப்பை, கழிவுகளை கொட்டுகிறார்கள். அருகில் பெண்கள் பள்ளி இருக்கிற சூழலில் துர்நாற்றம் வீசுகிறது, இதை தடுக்க வேண்டும்.

