/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி 10ம் கட்ட அகழாய்வில் சுடுமண் தொட்டி கண்டெடுப்பு
/
கீழடி 10ம் கட்ட அகழாய்வில் சுடுமண் தொட்டி கண்டெடுப்பு
கீழடி 10ம் கட்ட அகழாய்வில் சுடுமண் தொட்டி கண்டெடுப்பு
கீழடி 10ம் கட்ட அகழாய்வில் சுடுமண் தொட்டி கண்டெடுப்பு
ADDED : அக் 05, 2024 01:18 AM

கீழடி:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு பணியில், 50க்கும் மேற்பட்டோர் ஈடுபடுகின்றனர்.
இதுவரை ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டக்காய், தா என்ற தமிழி எழுத்து, மீன் உருவ பானை ஓடுகள், சுடுமண் அணிகலன், சுடுமண் குழாய், செங்கல் கட்டுமானம், சிவப்பு நிற பானை என, 50க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
ஒன்பதாவதாக தோண்டப்பட்ட குழியில், 1.5 அடி விட்டம் கொண்ட சுடுமண் தொட்டி, 1 அடி உயரம்வரை மேற்பகுதி மட்டும்வெளிப்பட்டுள்ளது. இதன் விளிம்பில் கலைநயம் மிக்க வளைவான கோடுகள் உள்ளன.
ஏழாம் கட்ட அகழாய்வின் போது மீன் உருவம் பொறிக்கப்பட்ட உறைகிணறும், சுடுமண் தொட்டியின் பக்கவாட்டு பகுதியில் கயிறு போன்ற அமைப்பும் கண்டறியப்பட்டன.
பத்தாம் கட்ட அகழாய்வு, ஏழாம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தில் இருந்த, 50 மீட்டர் துாரத்திலேயே நடக்கிறது. தற்போது கிடைத்த சுடுமண் தொட்டி அருகிலேயே, இரு வண்ண சுடுமண் பானை, கொடி போல வரையப்பட்ட பானை, வளைவான கோடுகள் கொண்ட பானை உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.
இந்த, கலைநயம் மிக்க சுடுமண் தொட்டியில் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்தியிருக்கலாம் என, தொல்லியல் துறையினர் கருதுகின்றனர்.