/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தகுதிசான்று இல்லாமல் வாகனம் இயக்கினால் பறிமுதல்
/
தகுதிசான்று இல்லாமல் வாகனம் இயக்கினால் பறிமுதல்
ADDED : நவ 20, 2025 04:03 AM
சிவகங்கை: மாவட்டத்தில் சரக்கு வாகனங்கள், பஸ், வேன்கள் பல தகுதி சான்று (எப்.சி.,) காலாவதியாகி இயக்கப்படுகிறது. தொடர்ந்து இயக்கப்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மாவட்டத்தில் சிவகங்கையில் வட்டார போக்குவரத்து அலுவலகம், காரைக்குடியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தின் கீழ் புதிய வாகனங்கள் பதிவு, பழைய வாகனங்களுக்கு தகுதி சான்று (எப்.சி.,) பெறுதல் போன்ற பணிகளுக்கு அன்றாடம் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
சரக்குகளை கையாள சரக்கு வேன், பயணிகள் மற்றும் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்ல வேன், பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர ஒப்பந்த அடிப்படையிலும் தனியார், கல்வி நிறுவனங்களுக்கு வேன், பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் உரிய தகுதி சான்று, இன்சூரன்ஸ் உடன், வாகனங்களில் முதலுதவி பெட்டி, கண்டக்டர், டிரைவர் உள்ளிட்டோருடன் விதிப்படி இயங்குகிறதா என வட்டார போக்குவரத்து ஆய்வாளர், அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.
ஆனால், இவர்களது கண்காணிப்பையும் மீறி இம்மாவட்டத்தில் காலாவதியான தகுதி சான்றை (எப்.சி.,) புதுப்பிக்காமல் ஏராளமான வேன், பஸ்கள் ஓடுகின்றன. குறிப்பாக சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் அதிகளவில் தகுதி சான்றின்றி வாகனங்கள் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தகுதிசான்றில்லா வாகனம் பறிமுதல் வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பண்ணன் கூறியதாவது: பள்ளி, கல்லுாரி வாகனங்களை உரிய முறையில் ஆய்வு செய்து தான் அனுமதிக்கிறோம். அதையும் மீறி தகுதி சான்றின்றி வாகனங்களை ஓட்டினால், அவற்றை பறிமுதல் செய்து ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். தகுதி சான்று பெற்று, அபராத தொகையை கட்டிய பின்னரே வாகனங்கள் விடுவிக்கப்படும் என்றார்.

