/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கொத்தடிமையாக இருந்த முதியவர் மீட்பு: உறவினர்களிடம் ஒப்படைப்பு
/
கொத்தடிமையாக இருந்த முதியவர் மீட்பு: உறவினர்களிடம் ஒப்படைப்பு
கொத்தடிமையாக இருந்த முதியவர் மீட்பு: உறவினர்களிடம் ஒப்படைப்பு
கொத்தடிமையாக இருந்த முதியவர் மீட்பு: உறவினர்களிடம் ஒப்படைப்பு
ADDED : மார் 16, 2025 12:45 AM
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே 20 ஆண்டாக கொத்தடிமையாக இருந்த ஆந்திர மாநில முதியவர் மாவட்ட நிர்வாகத்தால் மீட்கப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஆந்திரா மாநிலம் விஜயநகரம் அருகே உள்ள மனியம் மாவட்டம் பார்வதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கிஷா. இவரது மகன் அப்பாராவ் என்கிற கொண்டக்காரி சுக்கா 60.
இவருக்கு சீத்தாம்மா என்கிற பெண்ணுடன் திருமணமாகி தம்புதோரா சாயம்மா என்கிற பெண் குழந்தை உள்ளது. கட்டட தொழிலாளியான அப்பாராவ் 20 ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் புதுச்சேரியில் கட்டட பணிக்காக சென்னை வழியாக ரயிலில் சென்றனர்.
அப்போது அப்பாராவ் சென்னை ரயில் நிலையத்தில் டீ குடிப்பதற்காக இறங்கினார். ரயிலை தவறவிட்டதுடன் ராமேஸ்வரம் ரயிலில் மாறுதலாக ஏறி சிவகங்கை வந்தார்.
இவர் காளையார்கோவில் அருகே கடம்பங்குளத்தில் வீடு ஒன்றில் 20 வருடங்களாக ஆடுமேய்க்கும் தொழிலில் ஈடுபட்டார். இவரை தொழிலாளர் உதவி ஆணையர் முத்து தலைமையிலான குழுவினர் மீட்டனர்.
கலெக்டர் ஆஷா அஜித் உதவியுடன் அவரின் உறவினர்களை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆந்திரா மாநிலம் பார்வதிபுரம் மனியம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அப்பாராவ் உறவினர்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடம் நேற்று முன்தினம் அப்பாராவ் ஒப்படைக்கப்பட்டார்.
அப்பாராவிற்கு மாவட்ட கொத்தடிமை மறுவாழ்வு நிதி, கலெக்டர் விருப்ப நிதி, நன்கொடையாளர்கள் நிதி என மொத்தம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் அவரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதற்கான ஆணையை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.