ADDED : ஜன 23, 2025 04:17 AM
சிவகங்கை: 108 ஆம்புலன்சில் பணிபுரிய சிவகங்கை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் ஜன.25ம் தேதி நடைபெறுகிறது.
ஓட்டுநருக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு அன்று விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.162.5 சென்டிமீட்டர் குறையாமல் உயரம் இருக்க வேண்டும்.
இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓர் ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,820 வழங்கப்படும். தேர்வு முறையானது எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண் பார்வை திறன், மருத்துவம் சம்பந்த தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு நடைபெறும். அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்களுக்கு முறையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.
மருத்துவ உதவியாளருக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எஸ்.சி., நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., பிளஸ் 2க்கு பிறகு படித்திருக்க வேண்டும். அல்லது பி.எஸ்.சி.,யில் தாவரவியல், விலங்கியல், உயிர் வேதியியல், உயிர் தொழில்நுட்பம், நுண்ணுயிரியல், வாழ்க்கை அறிவியல் இதில் ஏதோ ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மாத ஊதியம் ரூ.16,020. நேர்முக தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். தேர்வு முறையானது எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முக, உடற்கூறியியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை, மனிதவளத்துறையின் நேர்முகத் தேர்வு.
இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு 044 - 28888060 எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

