/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் மழைக்கு வயல்கள் நீரில் மூழ்கின
/
திருப்புவனத்தில் மழைக்கு வயல்கள் நீரில் மூழ்கின
ADDED : அக் 14, 2024 08:39 AM

திருப்புவனம் : திருப்புவனத்தில் நேற்று முன்தினம் இரவு 14 செ.மீ., மழை அளவு பதிவாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் திருப்புவனம் வட்டாரத்தில் போதிய மழை இல்லாததால் விவசாயிகள் நெல் நடவு பணிகளை தொடங்கவே இல்லை.
ஆகஸ்ட் கடைசியில் தொடங்கும் மழை காரணமாக கண்மாய்களுக்கு வரும் மழை தண்ணீர் கூட இந்தாண்டு வரவில்லை. மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்யும் மழை காரணமாக வைகை ஆற்றில் மழை தண்ணீர் வருவது வழக்கம்.
செப்டம்பர் வரை கடும் வெயில் காரணமாக வைகை ஆற்றில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. செப்டம்பரில் பெய்த மழை வைகை ஆற்றை ஈரப்பதமாக்கியதுடன் சரி, மற்றபடி நீர்வரத்து இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழை பெய்தது. மின்சாரமும் அடிக்கடி துண்டிக்கப்பட்டது. திருப்புவனத்தில் இரவு முழுவதும் 139.2 மி.மீ., மழை அளவு பதிவாகியது. மழை காரணமாக திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள வயல்களில் மழை தண்ணீர் தேங்கியது.
இதனையடுத்து விவசாயிகள் வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றிய போது அதில் சிறுவர்கள் மீன்பிடித்து மகிழ்ந்தனர்.
மேலும் மழை காரணமாக திருப்புவனம் மருதமரம் அருகே பைபாஸ் சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன.