/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வெடித்து கழன்று ஓடிய அரசு பஸ் டயர்; தப்பிப்பிழைத்த பயணிகள்
/
வெடித்து கழன்று ஓடிய அரசு பஸ் டயர்; தப்பிப்பிழைத்த பயணிகள்
வெடித்து கழன்று ஓடிய அரசு பஸ் டயர்; தப்பிப்பிழைத்த பயணிகள்
வெடித்து கழன்று ஓடிய அரசு பஸ் டயர்; தப்பிப்பிழைத்த பயணிகள்
ADDED : மே 20, 2025 01:13 AM

திருப்புவனம்; ஓட்டை, உடைசல், மழை பெய்தால் உட்புறம் ஒழுகும் அரசு பஸ்கள் இயக்கப்படுவதற்கு மத்தியில் நேற்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தட்டான்குளத்தில் ஓடிய அரசு பஸ்சின் முன் பக்க டயர் வெடித்து கழன்று ஓடியது. அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள் மாற்று பஸ்களில் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 11:40 மணிக்கு மதுரை கோட்டத்தைச் சேர்ந்த (டி.என். 58 எண் 2795) அரசு பஸ் மதுரை புறப்பட்டது. டிரைவர் கண்ணன் 54,ஓட்டினார். கண்டக்டராக கண்ணன் 56, பணியில் இருந்தார். பஸ்சில் 55 பயணிகள் பயணித்தனர்.
நேற்று மதியம் 2:45 மணிக்கு மதுரை -- பரமக்குடி நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் தட்டான்குளம் அருகே சென்ற போது பஸ்சின் இடது முன்பக்க டயர் வெடித்து சிதறி கழன்று ஓடியது.
இதில் நுாறு மீட்டர் துாரம் பஸ் இழுத்து செல்லப்பட்டது. ஆனால் டிரைவர் கண்ணன் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தினார். பஸ்சுக்குள் இருந்த பயணிகள் பலரும் தடுமாறி விழுந்து உருண்டனர்.
ஆனால் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. ஒரு வழியாக பஸ் நின்றதும் அதிலிருந்து இறங்கிய பயணிகள் அடுத்தடுத்து வந்த பஸ்களில் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பயணிகள் கூறியதாவது : டவுன் பஸ்கள் தான் பராமரிப்பின்றி இயக்கப்படுகிறது என்றால் நீண்ட துார பஸ்களும் பராமரிப்பின்றி உள்ளன. நேற்று விபத்துக்குள்ளான பஸ்சின் டயரில் கிரிப்பே இல்லை. வழுவழு என மொசைக் தரை போல உள்ளது. சமதளத்தில் விபத்து நடந்ததால் உயிரிழப்பு இல்லை.
இதே விபத்து பாலத்தில் நடந்திருந்தால் உயிர் பலி ஏற்பட்டிருக்கும். இனியாவது தொலை துார பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றனர்.