ADDED : அக் 25, 2025 04:14 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கால்வாய் சீரமைப்பு முழுமை பெறாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட உப்பாறு அணைக்கட்டில் இருந்து அரசினம்பட்டி வழியாக செருதப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு தண்ணீர் செல்ல வன்னிமகுந்தான் கால்வாய் உள்ளது. இக்கால்வாயின் பல இடங்களில் குப்பை, மண் மூடியும், புதர் மண்டியும் கால்வாய் இருந்த இடமே தெரியாமல் போனது. வழக்கமாக வரும் மழைநீர் கூட கால்வாயில் வராத சூழல் இருந்தது. இக்கால்வாய் தற்போது தூர்வாரப்பட்டு மீட்டெடுக்கப்பட்டது. ஆனால் கோயில் வாசலை ஒட்டிய பகுதியில் கால்வாய் சீரமைக்கப்படாததால், தண்ணீர் முழுமையாக அதற்குரிய கண்மாய்களுக்கு சென்று சேர முடியாத நிலை உள்ளது.
எனவே கால்வாயை முழுமையாக சீரமைத்து அனைத்து கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்.

