சிவகங்கை மாவட்டத்தில் 521 வருவாய் கிராமங்கள் உள்ளன. 9 தாலுகா 445 கிராம ஊராட்சிகளை கொண்டுள்ளது. பஸ் போக்குவரத்தே இல்லாத 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 70 சதவீத மக்கள் கிராமங்களிலேயே வசித்து வருகின்றனர்.
திருமணம் செய்ய ஆண்களுக்கு குறைந்தபட்சம் 21 வயதும், பெண்களுக்கு 18 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.
மாவட்ட நிர்வாகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், சமூக நல அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் குழந்தை திருமண தடுப்பு குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த ஆண்டில் மட்டும் 51குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை தொடர்ந்தாலும் அவ்வபோது இந்த குழந்தை திருமணங்கள் கிராமங்களிலேயே அதிகமாக நடத்தப்படுகிறது.
இது பெரும்பாலும் உறவுகளுக்குள்ளேயே அதிகமாக நடக்கிறது. இவ்வாறு நடத்தப்படும் திருமணங்கள் மிக ரகசியமாக வைக்கப்படுகிறது. உறவுகள் யாரும் இது குறித்து வாய் திறப்பதில்லை.
திருமணம் நடத்தும் உறவுகளுக்குள் முன் விரோதம் உள்பட வேறு பிரச்னைகள் இருந்தால் மட்டுமே குழந்தை திருமண தகவல் வெளியேவருகிறது.
இதனால் குழந்தை திருமணம் என்பது அரசு நிர்வாகத்திற்கு தெரிவதில்லை. குழந்தை திருமணங்களில் பெண்களே 18 வயதிற்கு குறைவானவராக உள்ளனர். இவ்வாறு நடத்தப்படும் குழந்தை திருமணங்கள் பாலியல் வன்கொடுமையின் கீழ் கடுமையான வழக்காக பதிவு செய்யப்படுகிறது. இதனால் திருமணம் செய்த அல்லது செய்ய இருந்த ஆண், கடுமையான வழக்கு பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறார். சம்பந்தப்பட்ட உறவினர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
பள்ளிகளில் படிப்பை கைவிட்டு இடைநிற்கும் மாணவிகளை கணக்கிட்டால் அதில் பெரும்பாலான மாணவிகளின் இடை நிற்றலுக்கு காரணம் திருமணம் என்பது தெரிய வரும். ஆண்டு தோறும் ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் இரண்டு மாணவிகள் முதல் ஐந்து மாணவிகள் வரை இதுபோல் இடை நிற்கின்றனர். திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண்ணுக்கும் இதுபோன்ற திருமணங்கள் தவறு என விழிப்புணர்வு வேண்டும்.
தற்போது எல்லாம் மாறிவிட்டது என்ற நோக்கிலேயே குழந்தை திருமணங்களுக்கு எதிரான பிரசாரங்கள் குறைந்தன. ஆனால் அவைகளை அதிகப்படுத்த வேண்டிய நிலையே உள்ளது.
வருவாய்த்துறையினர், பள்ளி ஆசிரியர்கள், போலீசார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்தவர்கள், தொண்டு நிறுவனத்தினர் குழந்தை திருமண தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
புகார்கள் வந்தால் மட்டுமே குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுகிறது.