/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறாவயலில் ஜன.16ல் ஜல்லிக்கட்டு தடுப்பு அமைக்கும் பணி துவக்கம்
/
சிறாவயலில் ஜன.16ல் ஜல்லிக்கட்டு தடுப்பு அமைக்கும் பணி துவக்கம்
சிறாவயலில் ஜன.16ல் ஜல்லிக்கட்டு தடுப்பு அமைக்கும் பணி துவக்கம்
சிறாவயலில் ஜன.16ல் ஜல்லிக்கட்டு தடுப்பு அமைக்கும் பணி துவக்கம்
ADDED : ஜன 04, 2025 04:04 AM

சிவகங்கை: மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிறாவயல் ஜல்லிக்கட்டு ஜன.,16 ல் நடக்க உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளை விழா கமிட்டியினர் துவக்கியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தை பொங்கலை முன்னிட்டு ஜன., முதல் மே வரை சிறாவயல், கண்டுபட்டி, அரளிப்பாறை உட்பட 150 க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமஞ்சுவிரட்டுக்கள் நடைபெறும்.
குறிப்பாக மாட்டுப்பொங்கல் அன்று வரும் சிறாவயல் ஜல்லிக்கட்டு, ஜன. 16ல் நடைபெற உள்ளது.
சிறாவயல் ஜல்லிக்கட்டில் பங்கேற்க சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும். இது தவிர மஞ்சுவிரட்டு பொட்டலில் 500க்கும் மேற்பட்ட கட்டு மாடுகளை அவிழ்த்து விடுவர்.
சிறாவயல் ஜல்லிக்கட்டு விழாவை முன்னிட்டு கிராம கமிட்டி தலைவர் வேலுச்சாமி தலைமையில் நிர்வாகிகள் முதற்கட்ட பணிகளை துவக்கியுள்ளனர். ஜல்லிக்கட்டு நடக்கும் பொட்டலில், மாடுகள் அவிழ்த்துவிடும் வாடி வாசல், பார்வையாளர் அமரும் இடம், பொட்டலில் காளைகள் நின்று விளையாட தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
ஜன.,16 அன்று காலை 11:00 மணிக்கு பெரியநாயகி, தேனாச்சியம்மன் கோயிலில் இருந்து விழா கமிட்டியினர் ஊர்வலமாக ஜல்லிக்கட்டு பொட்டலுக்கு வருவார்கள். முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்படும். பின்னர் கலெக்டர், எஸ்.பி.,க்கள் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொள்வர். பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்படும்.
ஜல்லிக்கட்டு விழா பாதுகாப்பிற்கென மாவட்ட போலீஸ் சார்பில் தடுப்பு, வாட்ச் டவர்' அமைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், வாகன நெரிசலை குறைக்க முக்கிய இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.