/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வேலைஉறுதி திட்ட ஊழியர், அதிகாரிகள் ஒன்றரை மாதமாக சம்பளமின்றி தவிப்பு
/
வேலைஉறுதி திட்ட ஊழியர், அதிகாரிகள் ஒன்றரை மாதமாக சம்பளமின்றி தவிப்பு
வேலைஉறுதி திட்ட ஊழியர், அதிகாரிகள் ஒன்றரை மாதமாக சம்பளமின்றி தவிப்பு
வேலைஉறுதி திட்ட ஊழியர், அதிகாரிகள் ஒன்றரை மாதமாக சம்பளமின்றி தவிப்பு
ADDED : ஜன 29, 2025 01:37 AM
சிவகங்கை:தமிழகத்தில் வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிந்த ஊழியர், அதிகாரிகளுக்கு ஒன்றரை மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
நாட்டில் வேலை உறுதி திட்ட நிதியின் மூலம் கண்மாய், வரத்து கால்வாய் துார்வாருதல், மரக்கன்றுகள் நட்டு வளர்த்தல் உள்ளிட்ட அடிப்படை பணிகள் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் செய்யப்படுகின்றன.
இதற்காக அந்தந்த கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.284 முதல் ரூ.319 வரை சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதங்களாக வேலை உறுதி திட்ட அடையாள அட்டையுடன் பணி செய்தவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
அதே போன்று அந்தந்த மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரின் கீழ் பி.டி.ஓ., இன்ஜினியர்கள், 3 கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், 2 உதவியாளர், வட்டார அளவில் துணை பி.டி.ஓ., இளநிலை உதவியாளர், இன்ஜினியர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 4 பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவருக்கும் வேலை உறுதி திட்டத்தில் இருந்து தான் மாத சம்பளம் வழங்கப்படுகிறது.
அனைத்து மாவட்டங்களுக்கும் கடந்த ஒன்றரை மாதங்களாக வேலை உறுதி திட்ட நிதியை விடுவிக்காததால், சம்பளம் பெற முடியாமல் ஊழியர்கள், ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் தவித்து வருகின்றனர்.
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வேலை உறுதி திட்ட பணிக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். மாநில அரசும், மத்திய அரசிடம் கேட்டுள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்கியதும், நிலுவையில் உள்ள சம்பளம் வழங்கப்படும். இந்த நிலை தமிழகம் முழுவதும் நீடிக்கிறது என்றார்.