ADDED : பிப் 11, 2026 06:50 AM
சிவகங்கை: சிவகங்கையில் கொலை வழக்கில் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.
சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்துார் அருகே உள்ள புக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ரவிச்சந்திரன் 32. இவரது மனைவி கவிதா, இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கவிதாவின் சித்தி மகன் கூலி தொழிலாளி ராஜூ 26.
இவர் சிறுசாக்கவயல் கிராமத்தில் வசிக்கிறார். ராஜூ 2023 மே 3ம் தேதிபுக்குடி கிராமத்திற்கு வந்துள்ளார்.
அன்று இரவு மது வாங்கி கேட்டு ரவிச்சந்திரனிடம் தகராறு செய்தார். இதில் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதில் ரவிச்சந்திரனை கம்பால் அடித்து ராஜூ கொலை செய்தார்.
கவிதா திருவேகம்பத்துார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ராஜூவை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அழகர்சாமி ஆஜர் ஆனார். வழக்கை நீதிபதி அறிவொளி விசாரித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட ராஜூவிற்கு ஆயுள் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

