ADDED : நவ 04, 2025 04:10 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி-அம்பாள் பிரகார வலம் வந்தனர்.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பிரதோஷ தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. நேற்று மாலை 5:00 மணிக்கு ரமேஷ் குருக்கள்,பிரதோஷ குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யார்கள் நந்திதேவருக்கும், உற்ஸவ சுவாமி,அம்பாள் ஆகியோருக்கும் அபிேஷக, ஆராதனை நடத்தினர். தொடர்ந்து பிரதோஷ நாதரும், அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி கோயில் உட்பிரகாரங்களில் வலம் வந்தார்.
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. வெள்ளி உற்ஸவர் சோமநாதர் சுவாமி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள்வளாகத்தை வலம் வந்தனர்.
*சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.
சிங்கம்புணரி: சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தினி, சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. நேற்று மாலை 4:30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு அபிஷேகங்களும் சிறப்பு வழிபாடும் செய்யப்பட்டது. பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர், சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர்,முறையூர் மீனாட்சி சொக்கநாதர், கரிசல்பட்டி கைலாசநாதர், உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாதர் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

